பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரி கோவில்பட்டியில், 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்


பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க கோரி கோவில்பட்டியில், 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2018 8:45 PM GMT (Updated: 20 Feb 2018 2:34 PM GMT)

வருகிற 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக, தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி,

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வருகிற 3–ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக, தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சாலைமறியல்


கடந்த 2016–2017–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்து 100–ம், நக்கலமுத்தன்பட்டியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9 ஆயிரத்து 200–ம், இளவேலங்கால், மலைபட்டியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 200–ம் காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே விவசாயிகளுக்கு பாகுபாடின்றி, மக்காச்சோள பயிருக்கான முழு காப்பீடு தொகையான ஏக்கருக்கு ரூ.12 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி மெயின் ரோடு நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் முன்பு நேற்று காலையில் சாலைமறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

அதன்படி அந்த காப்பீட்டு நிறுவனத்தின் முன்பு ஏராளமான விவசாயிகள் கூடினர். உடனே அங்கு வந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விவசாயிகளிடம் சாலைமறியலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே கலைந்து செல்லுமாறு கூறினார். தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து ஊர்வலமாக கோவில்பட்டி காந்தி மண்டபத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை தலைவர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் நடராஜன் (தூத்துக்குடி வடக்கு), சவுந்திரபாண்டியன் (தெற்கு), நவநீதன் (விருதுநகர்), மாவட்ட செயலாளர் துரை, துணை தலைவர் சாமிஅய்யா, ஒருங்கிணைப்பாளர் அருமைராஜ், விளாத்திகுளம் தாலுகா தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் மறியல்

கூட்டத்தில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீடு தொகையை பாகுபாடின்றி சீராக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 3–ந்தேதி (சனிக்கிழமை) காலையில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


Next Story