பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது


பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 22 Feb 2018 11:52 PM GMT (Updated: 22 Feb 2018 11:52 PM GMT)

ஏர்செல் நிறுவன சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் சேவையை மாற்றுவதற்காக பி.எஸ்.என்.எல். அலுவலகங்களில் குவிந்தனர். இதனால் அங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவன சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அதில் இணைந்துள்ள வாடிக்கையாளர்களின் செல்போன் அழைப்புகள், இணையதள வசதிகள் முற்றிலும் முடங்கின. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலும் இந்த நிலை ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளிலும் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நேற்று முன்தினம் மாலையில் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்செல் சேவை முடங்கியதை கண்டித்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கியாஸ் இணைப்பு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் செல்போன் எண்ணை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முக்கிய ஆவணங்களில் செல்போன் எண்ணை இணைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், பல வருடங்களாக ஏர்செல் வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கும் மீண்டும் இந்த சேவை தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தங்கள் செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனங்களின் சேவைக்கு மாற்றும் முயற்சியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் இறங்கியுள்ளனர்.

ஏர்செல் நிறுவன சேவை பாதிக்கப்பட்டதால் நேற்று காலையில் இருந்தே பி.எஸ்.என்.எல். ஏர்செல், ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவன அலுவலகங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய சிம் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவன சேவை மையத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கு வசதியாக அந்தந்த நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோட்டோரங்களில் தற்காலிக சேவை மையங்களையும் அமைத்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிற சேவை நிறுவனங்கள் புதிய சலுகைகளையும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இதற்காக பிற வாடிக்கையாளர்களின் எண்ணை மாற்றாமல் அதே எண்ணில் தங்கள் சேவை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை இணைத்து வருகின்றனர். இதனால் குமரன்ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் நேற்று வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story