லட்சுமிகுட்டியம்மாவின் அபூர்வ சக்திகள்


லட்சுமிகுட்டியம்மாவின் அபூர்வ சக்திகள்
x
தினத்தந்தி 25 Feb 2018 9:04 AM GMT (Updated: 25 Feb 2018 9:04 AM GMT)

பத்மஸ்ரீ விருது பெற்ற கேரள மூலிகை வைத்தியர் லட்சுமிகுட்டியம்மாவிடம் சில அபூர்வ சக்திகள் இருக்கின்றன. பொன்முடி மலை அடிவாரத்தில் பனை ஓலை வேய்ந்த வீடு ஒன்றில் அவர் வசித்துவருகிறார்.

த்மஸ்ரீ விருது பெற்ற கேரள மூலிகை வைத்தியர் லட்சுமிகுட்டியம்மாவிடம் சில அபூர்வ சக்திகள் இருக்கின்றன. பொன்முடி மலை அடிவாரத்தில் பனை ஓலை வேய்ந்த வீடு ஒன்றில் அவர் வசித்துவருகிறார். அது சாணத்தால் மெழுகப்பட்டிருக்கிறது. உள்ளே மூலிகை மருந்துகள் தயாரிக்கும் அடுப்பு ஒன்று உள்ளது. அது இரவு-பகல் பாராமல் எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கிறது. அருகில் சிறிய பார்வதி கோவில் ஒன்றையும் அமைத்திருக்கிறார். அங்கும் எல்லா நேரமும் நெய் தீபம் எரிந்துகொண்டிருக்கிறது. இவர் போன் பயன்படுத்துவதில்லை. பொன்முடியில் இவரை சந்திக்க கல்லாறு சந்திப்பை கடந்து செக்போஸ்டை அடைய வேண்டும். அங்கிருந்து காட்டிற்கு செல்லும் ஒற்றையடி பாதையில் இவரது சிவ ஜோதி சிகிட்சாலயம் உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 57 கி.மீ. தூரத்தில் பொன்முடி அமைந்திருக்கிறது.

லட்சுமிகுட்டியம்மா தன்னிடம் இருக்கும் அபூர்வ சக்திகள் பற்றி கூறுகிறார்!

* மனிதர்கள் தங்களுக்கு வரும் நோயை கடவுள் போல் கருதவேண்டும். மருந்துகளான மந்திரங்கள் மூலம் அந்த தெய்வத்தை திருப்திபடுத்தவேண்டும்.

* நான் எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பேன். ஆனால் அதிகமாக மகிழ்ச்சியடைவதில்லை. அளவுக்கு அதிகமாக சந்தோஷப்படுகிறவர்கள், அளவுக்கு அதிகமாக துக்கமடையவேண்டியதும் இருக்கும். தாங்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியையோ, கவலையையோ உடலுக்கு கொடுக்கக்கூடாது. எல்லாவற்றிலும் ஒரு எல்லை இருக்கவேண்டும்.

* நீங்கள் வறுத்தது, பொரித்ததை எல்லாம் வீட்டில் சாப்பிடுவீர்கள். ஆனால் காட்டில் சாப்பிட அப்படி எதுவும் கிடைக்காது. இங்கு கிழங்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் காட்டுப் பன்றியும், குரங்குகளும் சாப்பிட்ட பின்பு மீதம் இருப்பதுதான் எங்களுக்கு கிடைக்கும். அதனால் நாங்கள் மருத்துவமனைகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை.

(லட்சுமி குட்டியம்மா தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு துளசி சேர்த்து கொதித்து ஆறிய ஒருவித பானத்தை பருக கொடுக்கிறார். மதியத்திற்கு மேலும் காத்திருப்பவர்களுக்கு வேகவைத்த காட்டு கப்பைக் கிழங்கும், காந்தாரி மிளகு- உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து உருவாக்கிய ஒரு வகை கூட்டும் வழங்குகிறார். பலா கொட்டையையும் சுட்டு கொடுக்கிறார்)

* காட்டில் உள்ள அனைத்து பச்சிலையிலும் மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் அதில் இருக்கும் சக்தியை அறிந்துகொள்ளும் அறிவு பயன்படுத்துகிறவர்களுக்கு இருக்கவேண்டும். பார்க்க அழகான சில செடிகள், பெரும் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் சில நோய்களுக்கு உள்ளேயும், வெளியேயும் விஷத்தைக் கொடுத்தால்தான், அந்த நோய் குணமாகும். ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு மந்திரம். அந்த மந்திரத்தை கடவுள்தான் சொல்லித்தருகிறார். அதனால்தான் நாங்கள் இந்த சிகிச்சையை தெய்வீகமாகவும், புனிதமாகவும் கருதுகிறோம்.

* மன்னர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலகட்டத்தில் எங்கள் மூதாதையர் காட்டை ஆண்டார்கள். அவர்கள் கடவுளை முன்நிறுத்தி நீதி, நேர்மை, சத்யம் தவறாமல் ஆட்சி செய்தார்கள்.

* கர்வமும், போதையும் நம்மிடம் இருக்கும் பிரச்சினைகள். போதையில் இருப்பவர்களுக்கு உடலுக்கும், மனதுக்கும் மருந்துகொடுக்கவேண்டும்.

* பகை மற்றும் பழிக்குப் பழியாக காட்டில் கொலைகள் நடக்காது. ஆனால் உணவுக்காக கொலை செய்யலாம். தின்ன முடியாததையும், பால் தருவதையும் கொல்லக்கூடாது என்பது காட்டின் சட்டம். காடு, காட்டு மிருகங்களுக்கானது. இங்கே வசிக்கும் மனிதர்கள் எல்லோரும் வாழ்வதற்காக குடிவந்தவர்கள். இவர்கள் கொன்றும், தின்றும் காலம்கழிப்பவர்கள். அதனால் மரண பயம் கிடையாது. அதனால்தான் அவர்கள் மனதைரியத்தோடு யானையோடு போராடு வார்கள். பாம்புகளை சுற்றித் தூக்கிவீசுவார்கள்.

* உங்களை பாம்பு கடித்தால் அதனை கொன்றுவிடாதீர்கள். ஏன்என்றால் மனித உடலுக்குள் அது செலுத்திய விஷத்தை அது திரும்பப் பெற அதன் உதவி தேவை. நமது பிரார்த்தனை அந்த ஜந்துவிடம்தான் செல்லும். அதனால் அதை கொன்றுவிட்டால் சிகிச்சை சிரமமாகிவிடும்.

* என்னிடம் பலரும் மிக அதிகமான விஷம் எதில் இருக்கிறது? என்று கேட்கிறார்கள். மனித நாக்கில்தான் மிக அதிக விஷம் இருக்கிறது. ஒரு குலத்தையே அழிக்க ஒரு நாக்கு போதும். மோசமான நாக்கில் இருந்துதான் எல்லா பிரச்சினைகளும் தொடங்குகின்றன.

* சில நாட்களில் மதிய நேரங்களில், ‘கிழக்கு திசையில் யாரையோ பாம்பு தீண்டியிருக்கிறது. அதற்கான மருந்தை சேகரிக்கவேண்டும்’ என்று என் உள்ளுணர்வு சொல்லும். உடனே பாம்பு விஷம் போக்கும் மூலிகையைத் தேடி காட்டிற்குள் இறங்கிவிடுவேன். மருந்தை தயார் செய்துவைத்துக்கொண்டு, விளக்கையும் ஏற்றிவைத்துவிட்டு காத்திருப்பேன். அப்போது விஷ பாதிப்புகொண்ட யாரையாவது தூக்கிக்கொண்டு ஓடி வருவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. சில நாட்கள் யாரும் வரமாட்டார்கள். ஆனாலும் நான் ஏற்றிய விளக்கை அணைக்கமாட்டேன். 45 வருடங்களாக நான் கொண்டிருக்கும் தியானம், பாரம்பரியமாக எனக்கு கிடைத்த சில அபூர்வ ஆற்றல், கடவுளின் கருணை போன்றவற்றால் இந்த சக்தி எனக்கு கிடைத்திருக்கிறது.

* அதிகாலையில் எல்லா கோழிகளும் ஒரே நேரத்தில் எப்படி கூவுகிறது என்ற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? ஆதிவாசி களான எங்கள் நம்பிக்கைப்படி முதலில் மாயக்கோழி கூவும். அந்த சத்தம் மனிதர்களுக்கு கேட்காது. கோழிகளுக்குதான் கேட்கும். அதனால்தான் காட்டில் உள்ள கோழிகளும், நாட்டில் உள்ள கோழிகளும் ஒரே நேரத்தில் கூவுகின்றன.

(30 ஆண்டுகளாக காட்டுக்குள் சிகிச்சை செய்து வந்த லட்சுமி குட்டியம்மாவுக்கு கேரள அரசு விருது வழங்கியதால் அவரது புகழ் வெளி உலகுக்கு தெரியவந்தது. அதன் பின்பு கேரளாவில் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பாடம் நடத்தினார். இந்தியாவில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் மூலிகை ஆராய்ச்சியாளர்களும், நோயாளிகளும் இவரைத் தேடி பொன்முடி மலை அடிவாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்)

Next Story