காஞ்சீபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள்- லாரியில் மணல் கடத்தல்; 6 பேர் கைது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள்- லாரியில் மணல் கடத்தல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 25 Feb 2018 6:32 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லாரியில் மணல் கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லாரி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அனுமந்தண்டலம் பகுதியில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 5 பேர் மோட்டார் சைக்கிளில் மூட்டைகளை கட்டி எடுத்து வந்தனர்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள், மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திச்செல்வது தெரிந்தது.

இதையடுத்து அழிசூர் கிராமத்தைச்சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 26), சசிக்குமார்(28), அனுமந்தண்டலத்தை சேர்ந்த முருகன்(30), விக்னேஷ்(28), சினையாம்பூண்டியை சேர்ந்த தனசேகரன்(41) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

காஞ்சீபுரம் அருகே மாகரல் அடுத்த காலூர் பகுதியில் பாலாற்றில் லாரியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அவர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.

அப்போது அங்கு ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக மேல்பெரமநல்லூர் பகுதியை சேர்ந்த சீனிவாசனை (24) போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story