சிவகங்கை அருகே வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு


சிவகங்கை அருகே வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 6:42 PM GMT)

சிவகங்கை அருகே திருமலை, கள்ளராதினிபட்டியில் 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை அருகே திருமலை, கள்ளராதினிப்பட்டி கிராமத்தில் ஆதினிகண்மாயின் வடக்கு பகுதியில் பழமையான மடை உள்ளது. இந்த மடையின் இருபுறமும் 15 அடி உயரமுடைய 2 கற்கள் உள்ளன. அவற்றின் தெற்குபுறம் உள்ள கல்லின் கீழ்ப்பகுதியில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.

அவற்றை திருமலையை சேர்ந்த டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றம் இளைஞர்களின் மூலம் படி எடுக்கப்பட்டு, அவை மதுரையில் உள்ள தொல்லியல் ஆய்வாளர் வேதாசலத்திடம் கொடுக்கப்பட்டது அவர் அதை படித்து பார்த்ததில், அதில் “12-ம் நூற்றாண்டு செயங்கொண்ட சோழனா கள வழி நாடாள்வன்” என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது 12-ம் நூற்றாண்டில் செயங்கொண்டான் என்ற சோழ மன்னர் இந்த மடையையும், கண்மாயையும் அமைத்துக்கொடுத்துள்ளார் என்பதாகும்.

இதுகுறித்து திருமலை டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்ற நிர்வாகி அய்யனார் கூறியதாவது:- 12-ம் நூற்றாண்டில் செயங்கொண்டான் என்ற சோழ மன்னன் விவசாயத்திற்காக ஏற்படுத்தியதே இந்த கண்மாய் மற்றும் மடையாகும். விவசாயம் இப்பகுதியில் செழித்தோங்கி இருந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் 200 ஏக்கர் பாசன வசதி பெற்று வந்துள்ளது. இன்றைய வருவாய் துறை கணக்கின்படி கண்மாயின் நீர்பிடி பகுதி மதுரை மாவட்டத்தில் இருந்து வருகிறது. கண்மாயில் 3 மடைகள் உள்ளன. கண்மாயில் 2 மறுகால் உள்ளன. வடக்கு புறம் கழுங்கு ஒன்றும், தெற்கு புறம் எட்டுக்கண் பாலம் உள்ளது. ஆதினிக்கண்மாய் தற்போது பொதுப்பணித்துறை வசம் உள்ளது.

தற்போது இந்த கண்மாயில் அதிகமாக சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதை அகற்ற சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story