இருமாநில அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலம் சிறுவாணி, ஆழியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது - எஸ்.பி.வேலுமணி பேட்டி


இருமாநில அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலம் சிறுவாணி, ஆழியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது - எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2018 10:30 PM GMT (Updated: 25 Feb 2018 6:58 PM GMT)

இருமாநில அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலம் சிறுவாணி, ஆழியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆழியாறு அணை பிரச்சினையையொட்டி, சிறுவாணியில் கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட்டது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், இருமாநில தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுவாணியில் இருந்து கூடுதல் தண்ணீர் கேரளாவுக்கு திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆழியாறு அணை தண்ணீரை நம்பி பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, காங்கேயம் விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் உரிய கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

குடிநீர், மின்உற்பத்தி ஆகியவற்றுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. இதுகுறித்தும் பேசப்பட்டு முடிவு காணப்பட்டுள்ளது. இருமாநிலங்களுக்கும் இடையில் 2 நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

கோவை, பெரம்பலூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலையில், தேவைப்பட்டால் மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story