விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு


விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 25 Feb 2018 6:58 PM GMT)

விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து குடிநீருக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. மேலும், அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, கேரள ஜனதா தளம் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்களை கடந்த 22-ந் தேதி முதல் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, போலீசார் பாதுகாப்புடன் கேரளாவிற்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கேரள மாநில எல்லையில் தமிழக வாகனங்களுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்தி வரும் கேரள ஜனதா தள கட்சியினரை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எதிராக கேரள எல்லையில் நடத்தப்படும் மறியலை முடிவுக்கு கொண்டு வரவும், தமிழக வாகனங்களுக்கும் கேரள தமிழர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யவும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மெத்த போக்கை கடைப்பிடிக்கும் தமிழக அரசை கண்டிப்பது. பி.ஏ.பி. திட்டத்தில் ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழக விவசாயத்தையும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் தேவையையும் கருத்தில் கொள்ளாமல் பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீரை எடுத்து சட்டத்திற்கு புறம்பாக கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்கும் முயற்சியினை தமிழக அரசு கைவிட வேண்டும்.

விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு முற்றுகையிடுவது. பி.ஏ.பி. சிக்கல் குறித்து பொதுமக்களிடம் தெருமுனை கூட்டம் மூலம் பிரசாரம் நடத்த வேண்டும். கேரள அரசியல்வாதிகளின் வன்முறை செயல்களை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ், ம.தி.மு.க. நகர துணை செயலாளர் முரளி, திராவிடர் கழகம் பரமசிவம், திராவிடர் விடுதலை கழகம் வெள்ளிங்கிரி, மனிதநேய மக்கள் கட்சி ஷேக் அப்துல்லா உள்பட பல்வேறு கட்சி, அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் நன்றி கூறினார்.

Next Story