கேரள பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து வழிபாடு


கேரள பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து வழிபாடு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 25 Feb 2018 7:15 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழாவில் நேற்று கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் மண்டபத்திற்கு வந்த சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின்னர் மேல கோவில் சென்றது. இரவு சுவாமி வெள்ளி தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மாசி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்தனர். அதேபோல் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி, புஷ்ப காவடி, சூரிய காவடி, பன்னீர் காவடி போன்றவை எடுத்தும் கோவிலுக்கு வந்து வழிபட்டு தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 5 மணிக்கு உருகுசட்ட சேவை நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு அபிஷேகம், அலங்காரமாகி, மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story