சாரண- சாரணியர் பேரணி


சாரண- சாரணியர் பேரணி
x
தினத்தந்தி 25 Feb 2018 9:45 PM GMT (Updated: 25 Feb 2018 7:25 PM GMT)

தூத்துக்குடி மாவட்ட சாரண- சாரணியர் சார்பில் பேரணி நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட சாரண- சாரணியர் இயக்கம் சார்பில் தூத்துக்குடி அருகே சிந்தனைநாள் போட்டிகள் நடந்தன. போட்டி தொடக்க விழாவுக்கு சாரண- சாரணியர் இயக்க மாநில பயிற்சியாளர் நாராயணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சத்யநேசக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால் வரவேற்று பேசினார். தேசிய பயிற்சியாளர் எபினேசர் சந்திரகாசன் சாரண- சாரணியர் கொடியேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு காய்கறிகள், பழங்கள் மூலம் அலங்கரித்தல், சமையல் போட்டிகள், பாத்திரம் இல்லாமல் சமைத்தல், இயற்கையை நேசிப்பவன் என்ற தலைப்பில் ரங்கோலி, கயிறு ஏறுதல், பூ தையல், நீர்வளங்களை மேம்படுத்துதல் குறித்த கட்டுரை போட்டி, சாலை விதிகளை மதித்தல் குறித்த ஓவிய போட்டி, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் திரளான சாரண- சாரணியர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து சாரண- சாரணியர் இயக்க நிறுவனர் பேடன் பவுல் பிறந்தநாளை முன்னிட்டு சிந்தனை நாள் பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. முடிவில் மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஜெயா சண்முகம் நன்றி கூறினார்.

Next Story