திருமூர்த்தி -அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு


திருமூர்த்தி -அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 25 Feb 2018 10:00 PM GMT (Updated: 25 Feb 2018 7:46 PM GMT)

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் நேற்று மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் உள்ளது. இந்த அணைகளுக்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் நீராதாரமாக உள்ளது. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படுகின்றது. ஆனால் திருமூர்த்தி அணைக்கு மட்டும் காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறப்படுகிறது.

திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை அடிப்படை ஆதாரமாக கொண்டு கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 4½ லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதன்படி விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களையும் கத்தரி, அவரைக்காய், கொய்யா, சப்போட்டா, முருங்கை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன் இந்த அணைகளை நீராதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களின் உயிர் நாடியாக திருமூர்த்தி அமராவதி அணைகள் விளங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக உலக வங்கி நிதியுதவியுடன் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அலைகற்கள் சீரமைப்பு, அணைகளின் இருபுறம் உள்ள கைப்பிடி சுவர்கள் சீரமைப்பு, அணைகளின் பின்புறத்தில் உள்ள சேதாரமடைந்த வடிகால் கால்வாய் புதுப்பித்தல், ஷட்டர்கள் பழுதுபார்த்து பராமரித்தல், அணைகளின் மேல் பகுதியில் வடிகால் வசதி மேம்படுத்துதல், புதிய மின் விளக்குகள் பொருத்துதல், புதிய ஜெனரேட்டர் பொருத்துதல், அணைகளின் மேல் பகுதியில் புதிதாக தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அணைகளில் தேங்கியுள்ள வண்டல்மண் தூர் வாரப்படாததால் நீர் இருப்பு குறைந்து வந்தது. இதுதொடர்பாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அணைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் தேங்கியுள்ள வண்டல்மண் மற்றும் செம்மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அரசு நிபந்தனைகளின் பேரில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் அள்ளிச்சென்றனர். அதன் பின்னர் பருவமழை தொடங்கியதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் வண்டல்மண் அள்ளும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் மத்திய அரசு அதிகாரிகள் திடீரென ஆய்வுமேற்கொண்டனர். அப்போது அணைகளில் நடைபெற்று முடிந்த புனரமைப்பு பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். அத்துடன் இனிவரும் காலங்களில் அணைகளை எவ்வாறு பராமரிப்பு என்பது குறித்த ஆலோசனைகளையும் மத்திய குழுவினர் பொதுப்பணித்துறையினருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதை பின்பற்றி அவ்வப்போது அணைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை அளிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் அணைகளின் பராமரிப்புக்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் திருமூர்த்தி அணையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலையில் அமராவதி அணையில் நிறைவுபெற்றது. இந்த ஆய்வின் போது மத்திய குழுவினருடன் 2 அணைகளைச்சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story