குந்துக்கோட்டை கிராமத்தில் எருது விடும் விழா காளைகள் முட்டி 10 பேர் படுகாயம்


குந்துக்கோட்டை கிராமத்தில் எருது விடும் விழா காளைகள் முட்டி 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Feb 2018 10:45 PM GMT (Updated: 25 Feb 2018 9:06 PM GMT)

குந்துக்கோட்டை கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீமல்லிகார்ஜூன சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. விழாவில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த காளைகள் அலங்கரித்து அழைத்து வரப்பட்டன. இதைத் தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எருதுவிடும் விழா நடந்தது. அப்போது காளைகள் துள்ளிக்குதித்து ஓடின. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் விரட்டி சென்று, அதன் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த வண்ண தட்டிகளை பறித்தனர். இதில் 10 பேர் காளைகள் முட்டி பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த எருதுவிடும் விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். 

Next Story