மைசூரு மன்னர் குடும்பத்தின் புதிய இளவரசருக்கு பெயர் சூட்டப்பட்டது


மைசூரு மன்னர் குடும்பத்தின் புதிய இளவரசருக்கு பெயர் சூட்டப்பட்டது
x
தினத்தந்தி 25 Feb 2018 11:35 PM GMT (Updated: 25 Feb 2018 11:35 PM GMT)

2017-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

பெங்களூரு,

மைசூரு மன்னர் குடும்பத்தின் புதிய வாரிசான குட்டி இளவரசருக்கு ‘ஆத்யவீர் நரசிம்மராஜ உடையார்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மைசூரு மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார். இவருக்கும், இளவரசி திரிஷிகாகுமாரிக்கும் இடையே கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மைசூரு மன்னர் குடும்பத்தில் ஆண் வாரிசே பிறக்கவில்லை என்றும், அதற்கு ஒரு பெண் இட்ட சாபம் தான் என்றும் கூறப்பட்டது. ஆண் வாரிசுக்காக மன்னர் குடும்பம் ஏங்கி தவித்தது.

இந்த நிலையில் இளவரசி திரிஷிகாகுமாரிக்கு கடந்த 2017-ம் ஆண்டு குட்டி இளவரசர், அதாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குட்டி இளவரசருக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக மன்னர் குடும்பத்தின் ராணி பிரமோதாதேவி மற்றும் மருமகளான இளவரசி திரிஷிகாகுமாரி ஆகியோருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் குட்டி இளவரசருக்கு பெயர் சூட்டும் விழா பெங்களூரு அரண்மனையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இந்த விழா தனிப்பட்ட முறையில் குடும்ப விழாவாக நடத்தப்பட்டது. இதில் காலை 11.30 மணியளவில் குட்டி இளவரசருக்கு ‘ஆத்யவீர் நரசிம்மராஜ உடையார்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த விழாவில் புரோகிதர்கள் பூஜை செய்து மந்திரங்களை ஓதினர். இது முற்றிலுமாக குடும்ப விழாவாக நடத்தப்பட்டதால், ஊடகங்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

Next Story