கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.52¼ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை அதிகாரி தகவல்


கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.52¼ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2018 9:30 PM GMT (Updated: 26 Feb 2018 5:34 PM GMT)

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.52¼ லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது. இதற்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், மக்காச்சோளம், உளுந்து, பச்சை பயறு, மணிலா, எள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மக்காச்சோளம், கம்பு, மணிலா, உளுந்து என ஆயிரத்துக்கும் அதிகமான தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

அவற்றில் 100 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,231-க்கும், குறைந்த பட்சமாக ரூ.1,069-க்கும், கம்பு ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.1,460-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,342-க்கும், உளுந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக 4 ஆயிரத்து 722 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 4 ஆயிரத்து 422 ரூபாய்க்கும், 80 கிலோ எடை கொண்ட மணிலா அதிகபட்சமாக 4 ஆயிரத்து 769 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4 ஆயிரத்து 690 ரூபாய்க்கும், ஒரு மூட்டை பச்சை பயறு அதிகபட்சமாக 5 ஆயிரத்து 103 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 4 ஆயிரத்து 391 ரூபாய்க்கும், ஒரு மூட்டை எள் 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த தானிய மூட்டைகளை விழுப்புரம், திருச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து கொள்முதல் செய்து சென்றனர். நேற்று மட்டும் ரூ.52 லட்சத்து 29 ஆயிரத்து 500-க்கு தானியங்கள் விற்பனையானதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி கலைச்செல்வி தெரிவித்தார்.

Next Story