விண்ணப்ப படிவ கட்டணம் உயர்வு: பூந்தமல்லி-தாம்பரம் நகராட்சிகளை கண்டித்து போராட்டம்


விண்ணப்ப படிவ கட்டணம் உயர்வு: பூந்தமல்லி-தாம்பரம் நகராட்சிகளை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:30 PM GMT (Updated: 26 Feb 2018 5:39 PM GMT)

விண்ணப்ப படிவ கட்டணம் உயர்வு: பூந்தமல்லி-தாம்பரம் நகராட்சிகளை கண்டித்து போராட்டம் என விக்கிரமராஜா பேட்டி அளித்துள்ளார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி, குமணன்சாவடி, கங்கையம்மன் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் செயல்படும் கடைகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெறுவதற்கு பூந்தமல்லி நகராட்சியில் வழங்கப்படும் விண்ணப்ப படிவம் இதற்கு முன்பு இலவசமாகவும், அதன்பிறகு ரூ.2, ரூ.5 என்றும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது விண்ணப்ப படிவ கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே பூந்தமல்லி நகராட்சியை கண்டித்து பூந்தமல்லியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டமும் நடத்தப்படும். இதற்கான தேதி இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இதேபோல் தாம்பரம் நகராட்சியை கண்டித்தும் போராட்டம் நடைபெறும்.

பூந்தமல்லி மற்றும் தாம்பரம் நகராட்சிகளை கண்டித்து நடைபெறும் போராட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளை கண்டித்து போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story