குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை தீவிரம்: மது விலக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?


குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை தீவிரம்: மது விலக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?
x
தினத்தந்தி 26 Feb 2018 10:30 PM GMT (Updated: 26 Feb 2018 5:39 PM GMT)

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி,

மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் என அனைத்து தரப்பினரும் போராட்டங்கள் நடத்தினர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு, மதுபான கடைகள் திறக்கப்படும் நேரத்தை குறைத்தது. தற்போது மதியம் 12 மணிக்கு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவைதொடர்ந்து அந்த மதுக்கடைகளை அகற்றி, மாற்று இடங்களில் அமைத்தது. இதனால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்தனர். மதுக்கடைகளை அகற்ற மது பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதன்பிறகு மாநில நெடுஞ்சாலைகளின் பெயர் களை மாற்றி மீண்டும் அதே இடத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டது. இதனால் மதுபிரியர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். போதையில் அவர்கள் செய்யும் ரகளையால் பொதுமக்கள் திண்டாட்டம் அடைந்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் மட்டும் சுமார் 9 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் உள்ள பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குன்றத்தூர் பகுதியில்தான் மதுவிலக்கு போலீஸ் நிலையம் அமைந்து உள்ளது. ஆனாலும் இதை போலீசார் கண்டுகொள்வது இல்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் உள்ள மதுக்கடை பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மதுக் கடைகள் மூடப்பட்ட பிறகு தொடங்கி, மதியம் 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்படுவது வரையிலும் பார்களில் வெளிப்படையாகவே மது விற்கின்றனர்.

இந்த மதுபானக்கடைகள் அருகே மின்வாரிய அலுவலகம், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்புகள் அமைந்து உள்ளது. இங்கு 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் மதுபிரியர்கள், வேலைக்கு எங்கும் செல்லாமல் காலையிலேயே மதுபானக்கடைகளுக்கு படை எடுக்க தொடங்கி விடுகின்றனர்.

அவர்கள் காலையிலேயே குடித்து விட்டு போதையில் அந்த வழியாக செல்லும் இளம்பெண்கள், பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்கிறார்கள். இதனால் மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் பெண்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பெண்கள் பகல் நேரத்திலேயே மதுக்கடை பார்களை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

சிலநேரங்களில் மதுபோதை அதிகமாகி ரகளையில் ஈடுபடுகிறார்கள். மதுபிரியர்களும் ஒருவருக்கு ஒருவர் போதையில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிஅடைந்து வருகின்றனர்.

எனவே குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மதுபானக்கடை பார்கள் மீது மது விலக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story