மத்திய சிறை கைதி திடீர் சாவு


மத்திய சிறை கைதி திடீர் சாவு
x
தினத்தந்தி 2 March 2018 10:30 PM GMT (Updated: 2 March 2018 6:31 PM GMT)

நெல்லையில் பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி நேற்று திடீரென்று உயிரிழந்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48). இவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணகுடி போலீசார் மணல் திருட்டு வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கான கட்டிடத்தில் பிரபாகரன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று அதிகாலையில் திடீரென்று பிரபாகரனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிறை வளாகத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சிறைக்காவலர்கள், பிரபாகரனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பிரபாகரன் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரபாகரன் சாவில் மர்மம் உள்ளதா? என்று நீதித்துறை விசாரணையும் நடைபெறுகிறது.

Next Story