4 அரிசி ஆலைகள் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


4 அரிசி ஆலைகள் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 8:03 PM GMT)

காங்கேயத்தில் 4 அரிசி ஆலைகள் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், தேங்காய் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இங்கு இருந்து அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

குறிப்பாக இங்குள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் முறையாக வருமான வரி கட்டுவது இல்லை என்றும், போலி பிராண்ட் பெயரில் வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருவதாகவும் கோவை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை காங்கேயம் வந்தனர். பின்னர் அதிரடியாக காங்கேயம்-கோவை ரோட்டில் உள்ள மகாராஜா அரிசி ஆலை நிறுவனங்களுக்கு சொந்தமான அரிசி ஆலைக்குள் சென்றனர்.

அதன்பின்னர் அந்த அரிசி ஆலையில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை.

அது மட்டுமல்ல முதலில் அங்குள்ள கணினியில் உள்ள ஹார்டு டிஸ்க்கை கைப்பற்றினார்கள். பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். நாள் ஒன்றுக்கு எத்தனை மூடை அரிசி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படும். அவற்றின் மதிப்பு என்ன? அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று அங்கிருந்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர்.

இதே போல் இந்த அரிசி ஆலைக்கு சொந்தமான மேலும் 2 அரிசி ஆலைகள் மற்றும் காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள மகாராஜா திருமண மண்டபம், மற்றொரு அரிசி ஆலை ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கோதனை செய்தனர். இந்த ஆய்வின்போது ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆவணங்களில் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரிசி ஆலை அதிபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தசோதனையால் பிற அரிசி ஆலை அதிபர்கள் மற்றும் நிதி நிறுவன அதிபர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Next Story