கூடலூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


கூடலூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 8:47 PM GMT)

கூடலூரில் விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்கக்கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்,

பிளஸ்-1, பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் மையத்தை கூடலூரில் தொடங்க வேண்டும். விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.10 ஊதியம் வழங்க வேண்டும். ஏப்ரல் மாத இறுதிக்குள் விடைத்தாள்கள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆனந்தி குமாரி தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் தண்டபாணி வரவேற்றார். தோழமை சங்க நிர்வாகிகள் சங்கர், அன்பழகன், கருணாநிதி, மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் ராஜகோபால், டெய்சி விமலா ராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மோகன் நன்றி கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆனந்திகுமாரி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் கூறியதாவது.

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுகளில் கலந்து கொண்டு மாணவ- மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை திருத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் மையம் ஊட்டியில் செயல்பட்டு வருகிறது. கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஊட்டிக்கு சென்று விடைத்தாள்களை திருத்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் ஆசிரியர்கள் சில மணி நேரம் பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு செல்லும் போது காலை 8 மணிக்கு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் விடைத்தாள்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி உள்ளது. இதனால் கூடலூரில் பிளஸ்-1, பிளஸ்- 2 விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விடைத்தாள்கள் திருத்துவதற்காக சுமார் 150 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் பெண் ஆசிரியைகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக சென்னையில் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டோம். இப்பகுதியில் உள்ள காலநிலை, பயண நேரத்தை அறிந்து கூடலூரில் விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும். இல்லை எனில் விடைத்தாள்கள் திருத்தும் பணியை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story