ரூ.456 கோடியில் புதிய சாலை பணிகள் தீவிரம்


ரூ.456 கோடியில் புதிய சாலை பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 March 2018 10:04 PM GMT (Updated: 8 March 2018 10:04 PM GMT)

ராமநாதபுரம்- காரைக்குடி இடையே ரூ.456 கோடியில் புதியசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம்-காரைக்குடி இடையே தற்போது உள்ள சாலையை புதிதாக தரம் உயர்த்தி இருவழிச்சாலையாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரூ.456 கோடி மதிப்பில் இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மற்றும் டெல்லியை சேர்ந்த நிறுவனத்தின் சார்பில் இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. காரைக்குடி-ராமநாதபுரம் இடையே உள்ள 80.5 கிலோ மீட்டர் சாலை இருவழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய சாலை திட்டத்தின்கீழ் 10 மீட்டர் அகலத்தில் சர்வதேச தரத்தினாலான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 4 மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ஒரு ரெயில்வே மேம்பாலமும், சருகனி சாலை, தொண்டி - மதுரை ரோடு அமைந்துள்ள கைகாட்டி பகுதி, தேவிபட்டினம் சந்திப்பு பகுதி ஆகியவற்றில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. பாலத்தின் கீழ் பகுதியில் வழக்கமான சாலையும், மேல்பகுதியில் புதிய இருவழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. தேவகோட்டை, புளியால், கைகாட்டி பகுதிகளில் பைபாஸ் சாலை அமைக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் புதிதாக மாற்றுச்சாலை போடப்படுகிறது. இந்த 80.5 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில் கிராமங்களை இணைக்கும் பகுதிகளில் பஸ்களை நிறுத்தும் வகையில் சர்வீஸ் சாலையும் அமைக்கப்படுகிறது.

மொத்தமுள்ள 80.5 கிலோ மீட்டர் சாலையில் 61 கிலோ மீட்டர் சாலை மட்டுமே தரைமட்டத்தில் அமைக்கப்படுகிறது. மீதம் உள்ள சாலை களிமண் பகுதியாக உள்ளதால் ஒரு மீட்டர் ஆழத்திற்கு தோண்டி மண் நிரப்பி அதன்மேல் சாலை போடப்பட உள்ளது. இதன்காரணமாக எவ்வளவு பாரம்கொண்ட வாகனங்கள் சென்றாலும் தாங்கும் திறன்பெற்றதாக இந்த சாலை அமையும்.

சாலை பணிகள் முடிவடைந்ததும் புளியால்-தேவகோட்டை இடையே ஒரு சுங்கசாவடியும், சோழந்தூர்-தேவிபட்டினம் இடையே ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள் ளது. 30 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த சாலை பணிகளை 4 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் பராமரிப்பினை மேற்கொள்ளும். ராமநாதபுரத்தில் இருந்து ஒரு பிரிவாகவும், தேவகோட்டையில் இருந்து ஒரு பிரிவாகவும் நடைபெற்று வரும் இந்த சாலை பணிகளை திட்ட காலத்திற்கு முன்னதாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. இதற்காக தற்போது சாலை அளவீடு, சிறிய பால வேலைகளும், சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள், சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story