லோக் அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை மத்திய மந்திரி சதானந்த கவுடா பேச்சு


லோக் அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை மத்திய மந்திரி சதானந்த கவுடா பேச்சு
x
தினத்தந்தி 8 March 2018 11:34 PM GMT (Updated: 8 March 2018 11:34 PM GMT)

கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், லோக் அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை என்றும் மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவை பாதுகாப்போம் என்று வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. 6-வது நாளாக நேற்று ஸ்ரீராமபுரம், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பாதயாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய மந்திரி சதானந்தகவுடா, முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஹெப்பாலில் நடந்த பாதயாத்திரையின் போது மத்திய மந்திரி சதானந்தகவுடா பேசியதாவது:-

நான் பா.ஜனதா கட்சியின் கர்நாடக மாநில தலைவராக இருந்துள்ளேன். மாநில முதல்-மந்திரியாக இருந்துள்ளேன். எத்தனையோ முதல்-மந்திரிகளை பார்த்துள்ளேன். ஆனால் சித்தராமையாவை போல ஊழலில் ஈடுபடும் முதல்-மந்திரியை பார்த்ததில்லை. ஊழலுக்கு எதிராக லோக் அயுக்தா அமைப்பு கம்பீரமாக இருந்தது. அந்த அமைப்பையே காங்கிரஸ் ஆட்சியில் செயல்பட முடியாமல் சித்தராமையா முடக்கி விட்டார்.

சித்தராமையாவும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளவர்களும் ஊழலில் ஈடுபடுவதற்கு வசதியாக தான் லோக் அயுக்தா அமைப்பை செயல்படாமல் வைத்துள்ளனர் என நினைக்கிறேன். அத்துடன் நிற்காமல் லோக் அயுக்தா நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரையே குத்திக் கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அந்த அளவுக்கு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

லோக் அயுக்தா நீதிபதிக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். பெங்களூருவில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அவ்வாறு செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகள் பறிக்கப்படுகின்றன. வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றால், கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகள், பணத்தை அள்ளி சென்றுவிடுகிறார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் தீ விபத்து நடந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து சென்ற நிலை மாறி, ஏரியில் பிடித்து எரியும் தீயை அணைக்க தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியும், முதல்-மந்திரி சித்தராமையாவும் தான் காரணம்.

இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.


Next Story