அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் டெல்லி சென்று வலியுறுத்துவோம்


அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் டெல்லி சென்று வலியுறுத்துவோம்
x
தினத்தந்தி 8 March 2018 11:46 PM GMT (Updated: 8 March 2018 11:46 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழகத்துக்கு பாதகமாக அமைந்துள்ள போதிலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தை போல் புதுவையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று மாலை தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், விஜயவேணி, அன்பழகன், அசனா, வையாபுரி மணிகண்டன், சிவா, கீதா ஆனந்தன், என்.எஸ்.ஜெ.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், பெருமாள், முருகன், பா.ஜ.க. துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ராஷ்ரிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். இதில் கடைமடை பகுதியான காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும். இந்த நிலையில் கடந்த மாதம் புதுவை வந்த பிரதமர் மோடியை, நானும், அமைச்சர்களும் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு வலியுறுத்தினோம்.

அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நாளை(இன்று) டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், புதுச்சேரி உட்பட 4 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுவை மாநிலம் சார்பில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினோம். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கவில்லை என்றால் அதனை அமைக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள், பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச்சென்று அங்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தினால் மத்திய அரசு உச்சநீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும். கடைமடை பகுதியான காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். காரைக்கால் பகுதி மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story