காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம்


காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம்
x
தினத்தந்தி 8 March 2018 11:53 PM GMT (Updated: 8 March 2018 11:53 PM GMT)

ஆண்டிகொட்டாய் கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா ஆண்டிகொட்டாய் கிராமத்தில் நேற்று சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. இதில் கலந்துகொள்ள கொணவட்டம், ஆலங்காயம், பள்ளிகொண்டா, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன.

காளைகளை விரட்டுவதற்கும் காளை மீது கையைபோடுவதற்கும் இளைஞர்கள் திரண்டிருந்தனர். அதே போல் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்ப்பதற்காக பொதுமக்கள் மாடி வீடுகள் மீதும் மதில் சுவர்கள் மீதும் நின்று வேடிக்கை பார்த்தனர். காளை விடும் விழா தொடங்குவதற்கு முன்பு அணைக்கட்டு கால்நடை மருத்துவர் அரேஷ் மற்றும் உதவி மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்த பிறகே போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்தனர்.

காளை விடும் விழாவை அணைக்கட்டு தாசில்தார் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவை போட்டி போட்டு கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின.

இளைஞர்களின் ஆரவாரத்தில் காளைகள் மிரண்டு தெருவில் அங்கும் இங்குமாக ஓடின. சில காளைகள் பாதுகாப்பு தடுப்பு கம்புகளை தாண்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை முட்டி தள்ளியது. இதில் 16-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பார்த்தீபன், வினோத், சாந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கமணி, கவுதம் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில், வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்பாடுகளை ஆண்டிகொட்டாய் ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story