செங்கோட்டை அருகே வீடு புகுந்து துணிகரம்: பெண்ணின் கழுத்தை அறுத்து ரூ.2 லட்சம் கொள்ளை


செங்கோட்டை அருகே வீடு புகுந்து துணிகரம்: பெண்ணின் கழுத்தை அறுத்து ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 9 March 2018 9:15 PM GMT (Updated: 9 March 2018 12:42 PM GMT)

செங்கோட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கி கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செங்கோட்டை,

செங்கோட்டை அருகே நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கி கொண்டு இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து, ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கழுத்து அறுப்பு


நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு மண்டபத் தெருவை சேர்ந்தவர் இசக்கி முதலியார். இவருடைய மனைவி திருமலை (வயது 50). இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகன் உள்ளார். இசக்கி முதலியார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது இசக்கிமுத்து கேரளாவில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். வீட்டில் திருமலை மட்டும் தனியாக இருந்து வந்தார். இவர், கூலி வேலைக்கு சென்று வருவார். நேற்று முன்தினம் இரவு திருமலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடி வழியாக சென்று ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினான். வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த திருமலையை அந்த நபர் கட்டையால் தாக்கினான். இதில் கண்விழித்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். உடனே வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து திருமலையின் பின்கழுத்தை அந்த மர்மநபர் அறுத்தான். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார்.

ரூ.2 லட்சம் கொள்ளை

இதையடுத்து அந்த மர்ம நபர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த திருமலை தட்டுத்தடுமாறி வெளியே வந்து நடந்த விவரத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். பின்னர் அவரை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மர்ம நபருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து புளியரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் கழுத்தை அறுத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார். இந்த துணிகர கொள்ளை சம்பவம் செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story