சாத்தான்குளம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார் போலீசார் விசாரணை


சாத்தான்குளம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 March 2018 8:30 PM GMT (Updated: 9 March 2018 2:12 PM GMT)

சாத்தான்குளம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண் மாயம்

சாத்தான்குளம் அருகே உள்ள செம்பொன்குடியிருப்பைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் திருப்பூரில் மில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஜெகதீசுவரி (வயது 17). 7–ம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ஜெகதீசுவரி கடந்த ஒரு ஆண்டாக மாத்திரை சாப்பிடவில்லை. இந்த நிலையில் கடந்த 7–ந்தேதி மதியம் வீட்டில் இருந்த ஜெகதீசுவரி திடீரென்று மாயமானார். எனவே அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடினர்.

கிணற்றில் பிணமாக மிதந்தார்

இந்த நிலையில் நேற்று காலையில் செம்பொன்குடியிருப்பு ஊருக்கு கிழக்கே உள்ள பாழடைந்த கிணற்றில் ஜெகதீசுவரி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் இறங்கி, ஜெகதீசுவரியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகதீசுவரி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story