குக்கிராமத்தில் ஒரு கோபுரம்


குக்கிராமத்தில் ஒரு கோபுரம்
x
தினத்தந்தி 11 March 2018 7:08 AM GMT (Updated: 11 March 2018 7:08 AM GMT)

வெற்றி எனும் மகுடத்தை சூடுவதற்கு அனைவருக்கும் ஆசைதான். அந்த உச்சத்தை அடைவதற்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவை மிக அவசியம்.

வெற்றி எனும் மகுடத்தை சூடுவதற்கு அனைவருக்கும் ஆசைதான். அந்த உச்சத்தை அடைவதற்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவை மிக அவசியம். இந்த தாரக மந்திரத்தை தவறாமல் கடைப்பிடித்தால் இலக்கு எளிதாகி விடும். இந்த வழியை பின்பற்றி குக்கிராமத்தில் இருந்து புறப்பட்டு கோபுரமாய் உயர்ந்து உன்னத பெண்ணாக மிளிர்கிறார், கார்த்திகேயனி.

இவர் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் ‘இந்திய வனப்பணி (ஐ.எப்.எஸ்)’க்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூரை அடுத்துள்ள வட்டமலைபுதூர் எனும் சிறிய கிராமத்தின் புது அடையாளமாக திகழ்கிறார். சாதித்த ஆர்ப்பரிப்பு எதுவுமின்றி அமைதியாக இருக்கும் அவர், அடுத்தகட்ட வெற்றிகளுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இவருடைய தந்தை கனகராஜ் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த சாதாரண விவசாயி. தாயார் ராதாமணி. தங்கை கவுதமி இறுதி ஆண்டு பயிலும் என்ஜினீயரிங் மாணவி. தம்பி கனிஷ்வேல் 5-ம் வகுப்பு மாணவன்.

‘ஐ.எப்.எஸ்’ அதிகாரியாகி, நம் தேசத்தின் வன வளத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளப் போகும் கார்த்திகேயனி நம்மோடு பேசுகிறார்:

‘‘எனது தந்தை பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டவர். எனவே, எங்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். குடும்ப சூழலில் சிக்காமல் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக என்னை பள்ளி விடுதியில் சேர்த்தார். பள்ளி படிப்பை முடித்துவிட்டு மதுரை வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்சி. படித்தேன். அதன் பின்னர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்று இருக் கிறேன்’’ என்றார்.

கார்த்திகேயினி முதலில் டாக்டருக்கு படிக்கவே ஆசைப்பட்டிருக்கிறார். பின்பு அவரது எண்ணம் விவசாயத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது!

‘‘நோய் தீர்க்கும் மருத்துவரை நாம் கடவுளாக பார்ப்போம். அதனால் நானும் அந்த துறைக்கு வரவே ஆசைப்பட்டேன். ஆனால், பிளஸ்-2 தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. அதற்கு நிறைய செலவாகும் என்பதால், எனது முடிவை மாற்றிக்கொண்டு வேளாண்மை கல்லூரியில் சேர்ந்தேன்.

நாங்கள் விவசாய குடும்பம் என்பதால், முழுமனதோடு விவசாய கல்வியை பயின்றேன். உலகுக்கே உணவு அளிக்கும் விவசாயத்தை பற்றி ஆராய்ச்சி மூலமாக நிறைய அறிந்துகொள்ள விரும்பினேன். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு, விவசாயத்தில் புகுத்தி வெற்றிபெற வேண்டும் என்றும் முடிவு செய்தேன். தற்போது ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு விவசாயத்துக்கு திரும்பி வருகிறார்கள். அவர் களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க ஆசைப்பட்டேன்’’ என்று கூறும் கார்த்திகேயனி, விவசாய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தனக்கு ஏற்பட்ட திருப்பத்தை பற்றி சொல்கிறார்..

‘‘மதுரை வேளாண்மை கல்லூரியில் படித்த பலர் சிவில் சர்வீசஸ் தேர்வு, வங்கித் தேர்வு போன்றவைகளை எழுதி உயர் அதிகாரிகளாக பணிபுரிகிறார்கள் என்பதை கல்லூரிக்கு சென்ற குறுகிய காலத்திலேயே அறிந்து கொண்டேன். மேலும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற பலர் அங்கு வந்து மாணவர்கள் மத்தியில் பேசுகிறார்கள். அது எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் முழு கவனத்தோடு விவசாய பட்டப்படிப்பை முடித்தேன். பின்பு எனது தந்தையிடம் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வேண்டும். அதற்காக சென்னை சென்று தங்கிப் படிக்க வேண்டும் என்று கூறினேன். எனது தங்கை சத்தியமங்கலத்தில் என்ஜினீயரிங் படிக் கிறாள். எனது தம்பி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவர்களது கல்விச் செலவுக்கு பணம் தேவை. இதற்கிடையே நான் சென்னையில் தங்கிப் படிப்பதென்றால் கூடுதல் செலவாகும். மேலும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெறுவது கடினம் என்ற நிலைப்பாடு உள்ளதால், எனது தந்தை முதலில் சற்று தயங்கினார்.

நான் அவரிடம் 3 ஆண்டு காலஅவகாசம் கேட்டேன். ‘அதற்குள் தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேர்ந்து விடுவேன். ஒருவேளை முடியா விட்டால் அதன்பின்னர் படிப்பைத் தொடராமல் உங்கள் விருப்பப்படி நடக்கிறேன்’ என்று கூறினேன். எனது உறுதியால் தந்தை சம்மதித்தார்.

சென்னையில் தங்கியிருந்து படிப்பை தொடங்கினேன். பணம் கேட்டால் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்காமல் அனுப்பிவிடுவார். அந்த அளவுக்கு என்னை நம்பினார். அந்த நம்பிக்கையை வெற்றியாக்கி, என் தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளேன்’’ என்கிறார்.

ஆனால் இவருக்கு வெற்றி அவ்வளவு எளிதாக வசப்படவில்லை. போராடித்தான் ஜெயித்திருக் கிறார்.

‘‘2015-ம் ஆண்டு முதல் முயற்சியில் முதல்நிலை தேர்விலேயே தோல்வி அடைந்தேன். அந்த தோல்வி எனக்கு எந்த பாடத்தை, எப்படி படிக்க வேண்டும் என்பதை புரிய வைத்தது. பொதுவாக விவசாயத்தில் முதன்முறையாக ஒரு பயிரை சாகுபடி செய்யும்போது நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிக்கும். இதனால் முதலில் தடுமாறி விடுவோம். அதே பயிரை மீண்டும் பயிரிடும் போது எந்த காலத்தில் எப்படி பராமரிக்க வேண்டும் என்று அறிந்து செயல்படுவோம். அந்த யுக்தி அனைத்துக்கும் பொருந்தும்.

அதன்படி எனது குறைகளை சரிசெய்து கொண்டு மீண்டும் படித்தேன். இதனால் 2-வது முயற்சியில் இந்திய வனப்பணிக்கு தேர்வாகி உள்ளேன். நாங்கள் மொத்தம் 110 பேர் நேர்முக தேர்வில் பங்கேற்றோம். அதில் நான் இந்திய அளவில் வனப்பணியில் 12-வது இடத்தை பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எனது தந்தை கொடுத்த கால அவகாசத்துக்குள் வெற்றிபெற்றுவிட்டேன்’’ என்று மகிழும் கார்த்தி கேயனி, விவசாயமும்-வனமும் நாட்டின் வளர்ச்சிக்கு இரு கண்கள் போன்றவை என்று கூறுகிறார்.

‘‘நான் சிறுவயதில் இருந்தே விவசாய பணிகளில் ஈடுபடுகிறேன். விவசாயத்தில் தான் மண்ணுடன், மனிதன் இணைந்து வாழ்கிறான். மழை தான் விவசாயத்துக்கு ஆதாரம். வனவளம் நன்றாக இருந்தால் தான் மழை பொழியும், விவசாயம் செழிக்கும். எனவே, விவசாயமும், வனமும் இரு கண்களாக ஒன்றுடன் ஒன்று இணைந்தே உள்ளது. வனவளம் என்பது மரங்கள், வனவிலங்குகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. காடுகளை பாதுகாப்பது, காடுகளில் மழை தரும் மரங்களை நடுவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுதல் போன்றவை மூலம் வனவளத்தை பெருக்கி, வனவிலங்குகளையும் காக்க வேண்டும். அதேபோல் சமூக காடுகளையும் அதிகரிக்க வேண்டும். இதற்கு சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்க வேண்டுமெனில், வனவளத்தை அழிக்காமல் மேம்படுத்தியே ஆகவேண்டும். காடுகள் அழியாமல் இருந்தால் மழைபெய்து, விவசாயம் செழிக்கும். நான் இதற்கான நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபடுவேன்’’ என்று உறுதியுடன் சொல்கிறார்.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தான் தயாரான விதத்தை கார்த்திகேயனி விளக்குகிறார்!

‘‘என்னுடன் கல்லூரியில் படித்த 3 மாணவிகளையும் சேர்த்துக்கொண்டேன். நாங்கள் நால்வரும் ஒரே அறையில் தங்கிப்படித்தோம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தாலும் அதனால் நாங்கள் உற்சாகத்தை இழக்கவில்லை. காலையில் தூங்கி விழித்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை படித்து கொண்டே இருப்போம். அதனால் 2 ஆண்டு களாக எங்களுக்கு பொழுதுபோக்கே கிடையாது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து படித்த பாடங்களை பற்றி விவாதிப்போம். அதன் மூலம் படித்தவை நினைவில் நின்று விடும். சில நேரம் பிடித்த புத்தகங்களை வாசிப்போம். ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி சாதனை படைத்தவர்களின் சாதனைத்திறன்களை பற்றியும் பேசுவோம். நான் காலை மற்றும் மாலை நேரங்களில் யோகா, தியானம் செய்வேன். அது உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த உற்சாகத்தைத்தரும்.

நமது இளமைப் பருவம் முக்கியமானது. 20 முதல் 29 வயது வரை நிறைய சாதிக்கலாம். பெண்களைப் பொறுத்தவரையில் 26 வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். எனவே, அதற்குள் பெண்கள் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும். அந்த காலகட்டத்தில் பொழுதுபோக்கில் ஆர்வம்காட்டினால் நம்மால் இலக்கை அடையமுடியாது. பெண்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும். தோல்வியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அடுத்த முயற்சியில் அதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் வெற்றி எளிதில்கிட்டும்’’ என்று ஆலோசனை தருகிறார்.

கார்த்திகேயனிக்கு ஐ.ஏ.எஸ். ஆகும் ஆசை இருக்கிறது. அதற்கான அடுத்தகட்ட முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இவர் பள்ளிப் பருவத்திலே சிறந்த தடகள வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். கல்லூரிப் பருவத்திலும் அது தொடர்ந்திருக்கிறது. மோட்டார் சைக்கிளும் ஓட்டுகிறார்.

Next Story