அயப்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?


அயப்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 March 2018 9:45 PM GMT (Updated: 18 March 2018 7:22 PM GMT)

திருமுல்லைவாயலில் இருந்து பிரித்து அயப்பாக்கத்தில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆவடி,

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஆவடி போலீஸ் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் உருவானது. 2015-ம் ஆண்டு வரை திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையில் வாடகை கட்டிடத்தில் இந்த போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.

தற்போது அதே பகுதியில் வேறொரு இடத்தில் சொந்த கட்டிடத்தில் இந்த போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு என 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 11 சப்-இன்ஸ்பெக்டர்கள், 40 போலீஸ்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் அதிகாரிகளுக்கு டிரைவராகவும், அலுவலக பணி மற்றும் கோர்ட்டு பணிக்காக போலீஸ்காரர்கள் பலர் வெளியில் செல்ல நேரிடுகிறது.

எனவே குறைந்த அளவிலான போலீஸ்காரர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். இந்த போலீஸ் நிலையத்தை சுற்றி நாகம்மை நகர், வைஷ்ணவி நகர், எஸ்.எம் நகர், சிவசக்தி நகர், அந்தோணி நகர், சோழம்பேடு ரோடு, சோழன் நகர், செந்தில் நகர், மணிகண்டபுரம், சரஸ்வதி நகர், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர், ஜாக் நகர், பத்மாவதி நகர், சாந்தி நகர், இ.எஸ்.ஐ. அண்ணா நகர், தாமரை நகர், ஸ்ரீசக்தி நகர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த போலீஸ் நிலைய எல்லை 42 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. சுமார் 4½ லட்சம் மக்கள் இந்த எல்லைக்குள் வசிக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. ஆவடி, அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், திருவேற்காடு ஆகிய பகுதிகள் அயப்பாக்கம் பகுதியின் எல்லையில் இருக்கின்றன. இங்கு மட்டும் சுமார் 1½ லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதை சுற்றி பவானி நகர், ஐயப்பா நகர், சீனிவாசா நகர், அபர்ணா நகர், தேவி நகர், கூட்டுறவு நகர், எழில் நகர், கணேஷ் நகர், காயத்ரி நகர், ராஜாம்பாள் நகர், ஜோதி நகர், மூன்று நகர், சத்யா நகர், அன்னை அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பூங்கா, பள்ளி, வங்கி, மருத்துவ ஆராய்ச்சி அலுவலகம் (ஐ.சி.எம்.ஆர்), வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல அரசு தனியார் அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஒரு போலீஸ் நிலைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் இந்நாள் வரை பாழடைந்து கிடக்கிறது.

திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் இருந்து அயப்பாக்கம் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போலீசார் வர அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். இதேபோல் அயப்பாக்கம் பகுதி மக்கள் திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுக்க 5 முதல் 10 கி.மீ தூரம் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அயப்பாக்கம் பகுதிகளில் தற்போது குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே குற்றச்சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தை 2 ஆக பிரித்து அயப்பாக்கம் பகுதியில் பாழடைந்த போலீஸ் நிலைய கட்டிடத்தை புதுப்பித்து புதிய போலீஸ் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story