கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி டயர் விளையாட்டு உயிரை பறித்தது


கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி டயர் விளையாட்டு உயிரை பறித்தது
x
தினத்தந்தி 9 April 2018 4:30 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுளம் அருகே டயரை உருட்டி விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அடுத்துள்ள மாவலிங்கை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பூபதி (வயது 5). முருகேசன் மகன் பாரதி (5). இதில் பூபதி அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பும், பாரதி செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளிக்கு விடுமுறை என்பதால் இருவரும் மோட்டார் சைக்கிள் டயரை சாலையில் உருட்டி விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சாலையோரத்தில் தரைமட்டமாக இருந்த கிணற்றில் ஒரு மாணவன் உருட்டி வந்த டயர் விழுந்தது.

இதையடுத்து கிணற்றுக்குள் விழுந்த டயரை எடுப்பதற்காக பூபதி, பாரதி ஆகிய 2 பேரும் கிணற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் கிணற்றில் தவறி விழுந்தனர். இதையடுத்து தண்ணீரில் தத்தளித்த 2 பேரும் ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்‘ என்று அபயகுரல் எழுப்பினர். கிணற்றில் இருந்து வரும் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றை எட்டிப்பார்த்தனர். அப்போது 2 பேரும் தத்தளிப்பதை பார்த்து கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த 2 மாணவர்களும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், பாடாலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கிய 2 மாணவர்களின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து 2 மாணவர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டயரை உருட்டி விளையாடிய போது 2 மாணவர்கள் இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story