‘ஸ்மார்ட் சிவகங்கா’ செயலி மூலம் அரசின் திட்டங்களை செல்போனில் தெரிந்துகொள்ளும் வசதி, அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார்


‘ஸ்மார்ட் சிவகங்கா’ செயலி மூலம் அரசின் திட்டங்களை செல்போனில் தெரிந்துகொள்ளும் வசதி, அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 15 April 2018 10:15 PM GMT (Updated: 15 April 2018 7:35 PM GMT)

‘ஸ்மார்ட் சிவகங்கா’ என்ற செயலி மூலம் அரசின் திட்டங்களை செல்பொனில் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கும் வசதியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கிவைத்தார்.

சிவகங்கை,

வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் இணைந்து அரசின் திட்டங்களை துறைவாரியாக செயல்படுத்துவதை பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாகவே பார்த்து தெரிந்துகொண்டு, திட்டங்களை பெறுவதற்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வகையில் ‘ஸ்மார்ட் சிவகங்கா’ என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் லதா தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.பி., தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு ‘ஸ்மார்ட் சிவகங்கா’ செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு புதியதாக ‘ஸ்மார்ட் சிவகங்கா’ என்ற செயலி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் அரசு வழங்கும் திட்டங்களை அனைவரும் தங்களது செல்போனிலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதில் ஒருமுறை மனுதாரர் விண்ணப்பித்தால் அவருடைய பதிவுமூப்பு அடிப்படையில் அவருக்கு அந்த நலத்திட்டம் எப்பொழுது கிடைக்கும் என்ற நிலவரத்தை தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக கால்நடை பராமரிப்புத்துறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து செயலி வழியாக தெரிந்து கொள்வதுடன், அதன்மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்தே தங்களது திட்டங்களுக்கு ஏற்ப துறைகள் குறித்து செயலியில் சென்று பதிவுசெய்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பெறுவதற்கு எவ்வித காலவிரயமும் ஆகக்கூடாது என்பதே. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கால்நடை பல்கலைக்கழக இயக்குனர் சுதீப்குமார், வருவாய் அலுவலர் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story