செங்குன்றத்தில் நடிகை சமந்தாவை பார்க்க திரண்ட ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு: போலீசாருடன் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு


செங்குன்றத்தில் நடிகை சமந்தாவை பார்க்க திரண்ட ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு: போலீசாருடன் வாக்குவாதம்- தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 15 April 2018 10:45 PM GMT (Updated: 15 April 2018 8:15 PM GMT)

செங்குன்றத்தில் நடிகை சமந்தாவை பார்க்க திரண்ட ரசிகர்களால் ஜி.என்.டி. சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சமந்தா அருகில் செல்ல விடாமல் தடுத்ததால் போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனர்.

பெரம்பூர்,

சென்னையை அடுத்த செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகை சமந்தா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை சமந்தா வரும் தகவல் அறிந்ததும், அவரை நேரில் காண்பதற்காக அந்த வணிக வளாகம் முன்பு ஏராளமான ரசிகர்கள், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்.

காரில் வந்து இறங்கிய நடிகை சமந்தா, அங்கு திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகத்தில் கையசைத்தார். அப்போது ஏராளமான ரசிகர் கள் முண்டியடித்து கொண்டு அவருக்கு அருகில் செல்லவும், செல்போனில் படம் பிடிக்கவும், அவருடன் ‘செல்பி’ எடுக்கவும் முயன்றனர்.

அவருடன் பாதுகாப்புக்கு வந்து இருந்த தனியார் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் ரசிகர்களை சமந்தா அருகில் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஜி.என்.டி. சாலையில் ரசிகர்கள் பட்டாளம் குவிந்து இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் நடிகை சமந்தாவும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு ரசிகர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஜி.என்.டி. சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story