கம்பத்தில் தொழிலாளி குத்திக்கொலை


கம்பத்தில் தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 15 April 2018 10:15 PM GMT (Updated: 15 April 2018 10:05 PM GMT)

தேனி மாவட்டம் கம்பத்தில் தொழிலாளி ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). இவர், தென்னை மரம் ஏறும் தொழிலாளி. நேற்று இரவு 10 மணி அளவில் இவர் கம்பம்மெட்டு பிரிவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர் பிணமாக கிடந்ததை யாரும் பார்க்கவில்லை.

அதன்பின்னர் அவருடைய உறவினர்கள் அவரை தேடி சென்ற போது, அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரிந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் சம்பவ இடத்துக்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story