பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய தூக்குப்பாலம் அமைக்க தூண்களில் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு


பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய தூக்குப்பாலம் அமைக்க தூண்களில் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு
x
தினத்தந்தி 16 April 2018 10:15 PM GMT (Updated: 16 April 2018 7:49 PM GMT)

பாம்பன் ரெயில் பாலத்தில் புதிய தூக்குப்பாலம் அமைக்க தூண்களில் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 104 ஆண்டுகளை கடந்து இன்று வரை கப்பல்கள் கடந்து செல்லும் போது மனித சக்திகள் மூலமாகவே இந்த பாலம் திறந்து மூடப்பட்டு வருகிறது. பழமையான இந்த தூக்குப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூட முடியாமல் ரெயில்வே தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மின்மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுடன் அதற்காக முதல் கட்டமாக ரெயில்வே துறைக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கிஉள்ளதாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில் பாம்பன் கடலில் அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப் பாலத்தை ஆய்வு செய்ய நேற்று ரெயில்வே துறையை சேர்ந்த ரெயில்வே கட்டுமான பிரிவில் உள்ள 8 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் மீன் பிடி நாட்டுப்படகில் சென்று தூக்குப்பாலத்தை தாங்கி நிற்கும் பழமையான 8 தூண்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து கடலின் அடியில் உள்ள பழமையான தூண்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய ரிமோட் ரோபோட் என்ற அதிநவீன எந்திரத்தை கடலில் மிதக்க விட்டு படகில் இருந்தபடியே ரிமோட் மூலம் செயல்படுத்தி அதன் தகவல்கள் கணினியில் பதிவுசெய்யப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு மாலை 3 மணி வரை நடைபெற்றது.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி கூறியதாவது:-

100 ஆண்டுகளை கடந்து கடலில் கம்பீரமாக நிற்கும் தூக்குப்பாலத்தை 8 தூண்கள் தாங்கிநிற்கின்றன. கடலின் அடியே ஒவ்வொரு பழமையான தூணும் சுமார் 46 அடி உயரம் கொண்டது. அகலப்பாதை பாலமாக மாற்றப்பட்ட பிறகு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தூக்குப்பாலத்தின் பாதுகாப்பு கருதி பழமையான தூண்களுக்கு அருகில் 4 புறமும் புதிதாக தூண்கள் அமைக்கப்பட உள்ளன.

பழமையான பாலமாக உள்ளதாலும் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூட சிரமமாக உள்ளதாலும் பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் ரூ.35 கோடியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 8 தூண்களின் உறுதித்தன்மையை ரெயில்வே கட்டுமானப்பிரிவில் உள்ள பொறியாளர்கள் குழுவினர் அதிநவீன எந்திரத்தின் மூலம் ஆய்வு செய்துவருகின்றனர். 2 தூண்களில் ஆய்வு பணி முடிந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் மீதமுள்ள 6 தூண்களிலும் ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்படும். இந்த ஆய்வு அறிக்கையை வைத்து தான் புதிய தூக்குப் பாலத்திற்கு புதிய தூண்கள் கட்டப்பட வேண்டுமா அல்லது தற்போது உள்ள இந்த தூண்களே போதுமானதா என்பது குறித்து உறுதியாக தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story