கொரட்டூரில் குடும்பத் தகராறில் பெண் தற்கொலை


கொரட்டூரில் குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2018 11:00 PM GMT (Updated: 16 April 2018 8:57 PM GMT)

கொரட்டூரில் குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை குறித்து கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் அருகிலுள்ள மதானங்குப்பம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 50). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றதால், பத்மா (42) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் கவுசல்யா (20) என்ற மகள் உள்ளார்.

பத்மாவும் முதல் கணவரை பிரிந்தவர். அவருக்கு முதல் கணவர் மூலம் நரேஷ் குமார் (16) என்ற மகன் உள்ளார். இவர் அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நரேஷ் குமாரை ஒழுங்காக நடந்துகொள்ளுமாறு கலைவாணன் அடிக்கடி கண்டித்ததாக தெரிகிறது. நேற்று முன்தினமும், இதைப்போல நரேசை, கலைவாணன் கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. தனது முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதால் நரேசை வேண்டுமென்றே கலைவாணன் கொடுமைப்படுத்துவதாக நினைத்து பத்மா கவலையுடன் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பத்மா நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிர்ச்சியடைந்த கலைவாணன் கொரட்டூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, பத்மாவின் பிணத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பத்மாவின் தற்கொலை குறித்து கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

Next Story