மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற ஆத்திரத்தில் தகராறு செய்த பெயிண்டரை வெட்டிக் கொன்ற மாமனார்-மாமியார்


மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற ஆத்திரத்தில் தகராறு செய்த பெயிண்டரை வெட்டிக் கொன்ற மாமனார்-மாமியார்
x
தினத்தந்தி 16 April 2018 11:15 PM GMT (Updated: 16 April 2018 9:15 PM GMT)

மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதை தட்டிக் கேட்க மாமனார் வீட்டுக்கு வந்த பெயிண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்த குமார் (வயது37). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஜெயந்தகுமார், மாமனார் வீட்டின் அருகே வசித்து வந்தார்.இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். தினமும் பள்ளிக்கு வேனில் சென்று வருவது வழக்கம்.

நிஷா தனது மகன்களை வேனில் ஏற்றிவிட செல்லும் போது அவருக்கும், வேன் டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஜெயந்த குமாருக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் நிஷா தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதையடுத்து நிஷாவை காணவில்லை என திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி நிஷாவையும், இரண்டு மகன்களையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து, கணவர் ஜெயந்த குமாரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கணவன் -மனைவியை சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால், நிஷா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். இதையடுத்து நிஷா, தனது மகன்களுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அங்கு சென்ற 3-வது நாள் மீண்டும் நிஷா, மகன்களுடன் கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதையடுத்து ஜெயந்தகுமார் தேடிச் சென்று தன்னுடைய 2 மகன்களையும் நிஷாவிடம் இருந்து அழைத்து வந்து தனது சகோதரி வீட்டில் ஒப்படைத்தார். ஆனால், நிஷா திரும்ப வராமல் கள்ளக்காதலனுடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார்.

இதன் பின்பு ஜெயந்தகுமார் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயந்தகுமார் குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்று, நிஷா கள்ளக்காதலனுடன் சென்றது கூறி தகராறு செய்தார். அவரை மாமனார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி புஷ்பகலா ஆகியோர் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஜெயந்தகுமார் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் ஜெயந்தகுமாருக்கும், மாமனாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெயந்தகுமாரை கம்பால் தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதற்கு மாமியார் புஷ்பகலாவும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவருகிறது. வெட்டுக்காயம் அடைந்த ஜெயந்தகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஜெயந்தகுமாரை கொலை செய்த மணிகண்டன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்தார். அவரையும், அவரது மனைவி புஷ்பகலாவையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயந்தகுமார் உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அவிநேவ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். நிஷாவின் கள்ளக்காதலனையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story