குன்னூர் அருகே தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்


குன்னூர் அருகே தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பஸ்
x
தினத்தந்தி 20 April 2018 10:00 PM GMT (Updated: 20 April 2018 8:32 PM GMT)

குன்னூர் அருகே தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் அந்தரத்தில் தொங்கியது. இதில் பயணம் செய்த 39 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

குன்னூர்,

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. இதன்காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க டிரைவர்கள் சிரமம் அடைந்தனர். ஊட்டியில் இருந்து பழனிக்கு மாலை 3 மணியளவில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை விஜயன் (வயது 43) என்பவர் ஓட்டி சென்றார். இதில், 39 பயணிகள் பயணம் செய்தனர்.

குன்னூர் அருகே உள்ள காந்திபுரத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட டிரைவர் முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்றது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பீதியடைந்து அலறினார்கள். பின்னர் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சின் பாதியளவு அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. கொஞ்சம் நகர்ந்தால் 50 அடி பள்ளத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து இருக்கும்.

உடனே சுதாரித்துக்கொண்ட பயணிகள் அனைவரும் பின்பக்க வாசல் வழியாக இறங்கினர். இந்த விபத்தில் 39 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் பழனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story