கோயம்பேட்டில் தனியார் மருத்துவமனை கட்டிடத்துக்கு ‘சீல்’


கோயம்பேட்டில் தனியார் மருத்துவமனை கட்டிடத்துக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 21 April 2018 11:00 PM GMT (Updated: 21 April 2018 7:34 PM GMT)

கோயம்பேட்டில் தனியார் மருத்துவமனை கட்டிடத்துக்கு நீதிமன்ற உத்தரவுபடி வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கோயம்பேடு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் டாக்டர் செந்தில்நாதன்(வயது 57). இவர், சென்னை திருமங்கலம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெரிய அளவிலான மருத்துவமனைகள் கட்டி நடத்தி வருகிறார்.

இவர், மருத்துவமனை விரிவாக்கம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள வங்கிகளில் ரூ.20 கோடி அளவில் கடன் பெற்று உள்ளதாக தெரிகிறது. அதற்கு உத்தரவாதமாக மருத்துவமனைகளின் நில பத்திரங்களை அடமானமாக வங்கிகளில் செலுத்தி உள்ளார்.

ஆனால் வங்கிகளில் கடன் பெற்ற டாக்டர் செந்தில்நாதன் கடன் மற்றும் வட்டியை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வட்டியும், முதலும் அதிகமானதால், நீதிமன்றத்தை நாடிய வங்கிகள், அவர் உத்தரவாதமாக அளித்த மருத்துவமனை கட்டிடங்களை ஜப்தி செய்ய உத்தரவு பெற்றனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு நகல் டாக்டர் செந்தில்நாதனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு வருவாய் ஆய்வாளர் பத்மினி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், ஜப்தி செய்யும் வங்கி அதிகாரிகள் முதல் கட்டமாக நேற்று கோயம்பேட்டில் உள்ள மருத்துவமனையை ஜப்தி செய்யும் நடவடிக்கையாக அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தார்கள்.

முன்னதாக பாதுகாப்புக்காக வந்த உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர். அதில் 3 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். 

Next Story