பணத்துடன் வாழ்கிறோம் ஆனால் பயமாக இருக்கிறது! ஏன் இந்த நிலை?


பணத்துடன் வாழ்கிறோம் ஆனால் பயமாக இருக்கிறது! ஏன் இந்த நிலை?
x
தினத்தந்தி 22 April 2018 9:12 AM GMT (Updated: 22 April 2018 9:12 AM GMT)

‘படித்து முடித்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து கைநிறைய சம்பாதிப்பதுதான் லட்சியம்’ என்று வாழ்க்கையில் களம் இறங்கும் பெண்கள், அவை எல்லாம் கிடைத்தாலும், மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தடுமாறிப் போகிறார்கள்.

-நீங்கள் நன்றாக படித்திருக்கிறீர்களா?

ஆமாம்!

- நீங்கள் நிறைய சம்பாதிக்கிறீர்களா?

ஆமாம்!

- நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறதா?

ஆமாம்!

- ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறீர்களா?

இல்லை..!

.. இதுதான் வேலைக்கு செல்லும் பெண்களில் நிறைய பேர் அளிக்கும் பதிலாக இருக்கிறது.

‘படித்து முடித்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து கைநிறைய சம்பாதிப்பதுதான் லட்சியம்’ என்று வாழ்க்கையில் களம் இறங்கும் பெண்கள், அவை எல்லாம் கிடைத்தாலும், மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தடுமாறிப் போகிறார்கள். அந்த தடுமாற்றத்தை தாக்குப்பிடித்து, தங்கள் மனதை வலுப்படுத்திக்கொள்ள முடியாத பெண்கள், விரக்தியின் விளிம்பிற்கு சென்றுவிடுகிறார்கள். ‘இது என்ன வாழ்க்கை! இந்த வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆகவேண்டுமா?’ என்ற கேள்வி அவர்களுக்குள் எழுகிறது. அதனால் ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு தவறான தற்கொலை முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

பெண்களுக்கு எப்போதுமே பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்பு, திருமணத்திற்குப் பின்பு மாமியார் வீட்டிற்குப் போய் வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரை விட்டார்கள். எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அவர் களிடம் இல்லாமல் இருந்தது. அத்தகைய ஆற்றலை அவர்கள் பெற, பெண்கள் கல்வியையும், விழிப்புணர்வையும் நோக்கி திருப்பி விடப்பட்டார்கள். படித்தார்கள். பொது அறிவை பெற்றார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வாழும் ஆற்றலையும் பெற்றார்கள். எல்லாம் சரிதான். ஆனால் எளிதாக விரக்தி அடைந்து விடுகிறார்களே அது ஏன்? அப்படியானால் முன்பைவிட பெண்கள் இப்போது மனதளவில் பலவீனமாகிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

எதிர்காலத்தைப் பற்றிய பயம் பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. தகுந்த வாழ்வியல் பாதுகாப்பு இல்லை என்று நினைக் கிறார்கள். பணம் இருக்கிறது. ஆனால் அதைவிட அதிகமாக வேலைப்பளுவும், பிரச்சினைகளும் இருப்பதாக கருதுகிறார்கள். அதுவே அவர்களுக்கு தாங்க முடியாத மனஉளைச்சலை ஏற் படுத்துகிறது. அதனால் ‘பணத்துடன் வாழ்கிறோம். ஆனால் பயமாக இருக்கிறது. நகரத்தில் வாழ்கிறோம். ஆனால் வாழ்க்கை நரகமாக இருக்கிறது’ என்று சொல்லும் நிலைக்கு செல்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் எல்.கே.ஜி.யில் பள்ளிக்கு செல்லும்போது ஆரம்பித்த போட்டி வாழ்க்கையை, பருவ வயதை எட்டி பக்குவம் வந்த பின்பும் தொடர்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரர் களிடமோ, உறவினர்களிடமோ செல்வாக்கில்-செல்வத்தில் போட்டிப்போடுவதாக நினைத்துக்கொண்டு கண்டபடி கடன் வாங்குகிறார்கள். அதுவே அவர்களை பல்வேறு விதமான சிக்கலுக்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து மீள பல வழிகளில் முயற்சித்து உழைக்கிறார்கள். அப்போது ஏற்படும் ஓய்வற்ற நிலையும், தெளிவற்ற சிந்தனையும் அவர்களுக்குள் விரக்தியை விதைத்துவிடுகிறது.

‘துரத்திக் கொண்டு வரும் கடன், தலைக்குமேல் போகும் வட்டி, சமூக அந்தஸ்து என்ற பெயரில் தன்னைச் சுற்றி ஏற்படுத்திக் கொண்ட பந்தாக்கள் எல்லாம் சேர்ந்து தன் கழுத்தைச் சுற்றி இறுக்குவதாக’ கருதுகிறார்கள்.

பெண்கள் படித்து முன்னேறி தன் காலிலேயே நிற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவு. தங்களைப் போல பணப் பிரச்சினை இல்லாமலிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை. அதெல்லாம் சரிதான். ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களின் மனநிலையை-பிரச்சினையை பலரும் அறிவதில்லை. அலுவலகத்தில் வேலைப்பளுவால் மனம் வருந்தி சோர்ந்து போகும் போது அதை சரி செய்யும் பக்குவம் பல குடும்பங்களில் பெரியவர்களுக்கு இல்லை.

அடுத்தவர்களை நம்பிக் கொண்டிருக்காமல், தங்கள் மனதை பெண்கள் வலுப்படுத்திக்கொள்வது மட்டுமே, அவர்களது எதிர்காலத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கும். அதற்கு பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

மனித உடலில் பல்லாயிரம் கோடி ஜீவ அணுக்கள் உள்ளன. தொழில்நுட்ப சாதனங்களின் இடைவிடாத கதிர்வீச்சு இந்த நன்மை செய்யும் அணுக்களை சிறிது சிறிதாக அழிக்க முயற்சிக்கின்றன. பல்வேறு விதமான நோய்கள், வியாதிகள், மலட்டுத் தன்மை போன்றவைகளுக்கெல்லாம் இதுதான் காரணமாக இருக்கிறது. மனஅழுத்தம் உருவாகி, மனம் அலைபாயவும் இதுவே காரணம். மனதை அமைதிப்படுத்தி, ஜீவ அணுக்களின் சக்தியை அதிகரிக்க தியானம் உதவுகிறது. முறைப்படி கற்றுக்கொண்டு தியானம் செய்தால், மனதில் நிறைவும், தெளிவும் கிடைக்கும். அந்த சக்தியைக் கொண்டு, எந்த பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை முறியடிக்கும் ஆற்றல் கிடைக்கும். தியானம் செய்தால் ஆரோக்கியம் பெருகும். மனத் தெளிவும், ஆரோக்கியமும் கிடைக்கும்போது, முகமும் அழகுபெறும்.

வேலைக்காக மட்டுமே நேரத்தை ஒதுக்குவது பலரது வழக்கமாக இருக்கிறது. அதாவது வேலை பார்த்தால் பணம் கிடைக்கும். அதற்காகத்தான் நேரம் ஒதுக்குவேன் என்ற எண்ணம் கொண்டவர்களாக பலர் இருக்கிறார்கள். பணத்திற்காக மட்டுமே நேரம் ஒதுக்காமல் மனதிற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும். அப்படி நேரம் ஒதுக்கி, மனதிற்கு பிடித்த செயல்களை செய்தால், மனம் மகிழ்ச்சி அடையும். பாட்டு கேட்பது, கடற்கரைக்கு சென்று அலைகளை ரசிப்பது, ஊஞ்சல் ஆடுவது, நாய்க்குட்டியோடு விளையாடுவது, பூச்செடி வளர்ப்பது, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, சிற்பங்கள் மற்றும் விலங்குகளை கண்டு ரசிப்பது என்று ஏராளமான மகிழ்ச்சி தரும் விஷயங்கள் உள்ளன. அவைகளில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்ந்தெடுத்து அதை அனுபவிக்கவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

குடும்ப உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து பொழுதைக் கழிக்க திட்டமிடுங்கள். அவர்களோடு உணவருந்துங்கள். பொழுதுபோக்குங்கள். ஒருவரின் அனுபவங்கள் மூலம் மற்றவர் களின் மனச்சுமையை குறையுங்கள். நட்பு, உறவோடு கலகலப்பாக பொழுதுபோக்குவது, பல வருடங்கள் மனதை அழுத்தும் சுமையை அகற்றும். அதன் மூலம் மனதில் புது உற்சாகம் பிறக்கும்.

Next Story