பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீரில் மிதக்கும் தாராவி நேரு சால் பகுதி


பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீரில் மிதக்கும் தாராவி நேரு சால் பகுதி
x
தினத்தந்தி 24 April 2018 10:45 PM GMT (Updated: 24 April 2018 10:10 PM GMT)

பாதாள சாக்கடை குழாய் அடைப்பால் தாராவி நேரு சால் பகுதி கழிவுநீரில் மிதந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை, 

பாதாள சாக்கடை குழாய் அடைப்பால் தாராவி நேரு சால் பகுதி கழிவுநீரில் மிதந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வீட்டிற்குள் கழிவுநீர்

மும்பை தாராவி டோர்வாடா பகுதியில் நேரு சால் உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் பாதாள சாக்கடை குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அப்பகுதியில் வெள்ளம் போல தேங்குகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கழிவு நீரில் நடந்து செல்லவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு சில வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக அந்த பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் விரக்தியுடன் கூறினர்.

நிரந்தர தீர்வு காணவேண்டும்

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தீபக் கூறியதாவது:-

நேரு சால் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படும் பிரச்சினை கடந்த 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இது குறித்து இப்பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ.விடம் பல முறை புகார் அளித்துவிட்டோம். அவர்கள் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டவுடன் அதை சரி செய்கின்றனர். ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காணாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

வாரத்திற்கு 2, 3 முறை இதுபோல அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீட்டின் முன் தேங்கிவிடும். அப்போது எல்லாம் நாங்கள் இந்த கழிவுநீரில் தான் நடந்து செல்கிறோம். இதனால் இப்பகுதி மக்களுக்கு தோல் நோய் அதிகளவு ஏற்படுகிறது.

சிறுவர்களுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நேரு சால் பகுதியில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி நிரந்தர தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story