சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் சாவு

சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் இறந்ததால் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்,
சேலம் கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் தம்பிதுரை(வயது 34), மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மாதம் 5-ந் தேதி கருப்பூர் தபால் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நாய் ஒன்று குறுக்கே சென்றதால் தம்பிதுரை மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் தம்பிதுரையின் உறவினர்கள், ஆஸ்பத்திரி டாக்டர்களை சந்தித்தனர். அப்போது டாக்டர்களிடம், தம்பிதுரையை நாங்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யுங்கள் என்றனர். இதற்கு டாக்டர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று தம்பிதுரை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மாலையில் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் தம்பிதுரை இறந்ததாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் நுழைவு வாயிலை உள்பக்கமாக அடைத்து விட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அதிவிரைவு படையினரும் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர்.
பின்னர் உறவினர்கள், பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட ரூ.15 லட்சத்தை ஆஸ்பத்திரி நிர்வாகம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதைதொடர்ந்து தம்பி துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் இறந்தார். இதையடுத்து தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி அவருடைய உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story