காதல் திருமணம் செய்த மகள்: தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


காதல் திருமணம் செய்த மகள்: தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 4 May 2018 11:00 PM GMT (Updated: 4 May 2018 7:43 PM GMT)

காதல் திருமணம் செய்த மகள், போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் புகார் அளித்து உள்ளார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கிராமத்தெருவில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி (வயது 52). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (48). இவர்களின் மகள் சந்தியா(24)வும், சடையங்குப்பம் பாட்டை பகுதியை சேர்ந்த சதாசிவம்(25) என்பவரும் காதலித்து, கடந்த 2013-ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த விவகாரம் அறிந்த பெண்ணின் பெற்றோர், மகளை கண்டித்ததுடன், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனால் சதாசிவமும், சந்தியாவும் கடந்த மாதம் 27-ந்தேதி புழல் அருகே உள்ள அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். தனது காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக போலீசாரிடம் சந்தியா புகார் அளித்தார்.

அதன்பேரில் பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். இதில் மனமுடைந்த பாக்கியலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாக்கியலட்சுமியின் கணவர் பாலசுப்பிரமணி திருவொற்றியூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர், “என் மனைவியை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்ததால் அதிர்ச்சியில் அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்”என கூறி இருந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story