மல்லாங்கிணறு அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: மராமத்து செய்ய கோரிக்கை


மல்லாங்கிணறு அருகே இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: மராமத்து செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2018 10:00 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட அயன்ரெட்டியபட்டி அம்பேத்கர் காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மல்லாங்கிணறு பேரூராட்சியில் அயன்ரெட்டியபட்டி கிராமத்தில் அம்பேத்கர் காலனி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக புகார் கூறுகின்றனர். இங்கு குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி ஒரு வருடமாக செயல்படவில்லை. தெருவிளக்கு கம்பங்களும் சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இங்கு புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடமும் மேற்கூரை பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனஅப்பகுதிமக்கள் புகார் கூறி உள்ளனர்.

இந்த பகுதியில் ஏழை, எளிய மக்களுக்காக 10 வருடங்களுக்கு முன்னர் அரசு சார்பாக 20 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் இதில் 4 வீடுகள் இடிந்து விட்டன. வீடுகளை இழந்த குடும்பத்தினர் பிழைப்பு தேடி திருப்பூர் சென்று விட்டனர். இப்பகுதியில் வசிக்கும் செல்வி என்பவர் கூறுகையில், கடந்த 1 வருடமாக இப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் தொகுப்பு வீடுகள் அனைத்தும் முறையாக பராமரிப்பு இல்லாததால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் அம்பேத்கர் காலனி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை மராமத்து செய்வதோடு, ரேஷன் கடை கட்டிடத்தையும் மராமத்து செய்ய வேண்டும் என கோரி உள்ளனர். 

Next Story