நகை கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது


நகை கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 8:26 PM GMT)

ஏழுகிணறு பகுதியில் நகைக்கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

பிராட்வே,

சென்னை ஏழுகிணறு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கய்யா (வயது 36). இவர், சென்னை சவுகார்பேட்டை பகுதியில் நகை கடை வைத்துள்ளார். பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்தையால்பேட்டை, தாயப்பன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் ரங்கய்யாவிடம், “நீங்கள் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எனக்கு ரூ.4 லட்சம் மாமூல் தரவேண்டும். பணம் தராவிட்டால் வடசென்னை ரவுடிகளை வைத்து குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டினார்.

இது குறித்து ரங்கய்யா அளித்த புகாரின் பேரில் ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

கைதான மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் என கூறப்படுகிறது.

Next Story