போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிரம்


போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி: அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 5 May 2018 12:00 AM GMT (Updated: 4 May 2018 11:32 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுவையில் சமீப காலமாக சிலரது வங்கிக் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் பெருமளவு பணம் மோசடி செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து லாஸ்பேட்டை லட்சுமிநகரை சேர்ந்த பாலாஜி (வயது 26), முருங்கப்பாக்கத்தை சேர்ந்த சந்துரு (30), கடலூர் காராமணிக்குப்பம் கமல் (28), சென்னை கொளத்தூர் ஷியாம் (27) அரசு டாக்டர் விவேக் என்ற விவேக் ஆனந்தன்(28) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ஏ.டி.எம். கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பலரது வங்கிக் கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை எடுத்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சந்துருஜிக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அவர் லட்ச கணக்கில் பண பரிமாற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி சந்துருஜி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் சந்துருஜியுடன் வங்கி ஊழியர், அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகள் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக அவரது செல்போனை கண்காணித்ததில் சென்னை, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களை காட்டுகிறது. எனவே அவரை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர்.

Next Story