குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க தகவல் மையம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகார் தெரிவிக்க தகவல் மையம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 7:02 PM GMT)

குடிநீர் பிரச்சினை தொ டர்பாக புகார் தெரிவிக்க தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக கோவையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்்தில் கோடை காலத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்திட அனைத்து அலுவலர்களும் போர்கால நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய நகராட்சிகள் செயல்பாட்டிலுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீராதாரங்களை கொண்டு பருவமழை பொய்த்தாலும் வருகிற டிசம்பர் மாதம் வரை குடிநீர் தங்குதடையின்றி வழங்க முடியும்.

கோவை மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் 70 முதல் 120 லிட்டர் வரையிலும், 8 பேரூராட்சிகளில் 121 முதல் 150 லிட்டர் வரையிலும், 6 பேரூராட்சிகளில் 151 முதல் 190 லிட்டர் வரையிலும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தின் மொத்தமுள்ள 37 பேரூராட்சிகளில் 336 கை பம்புகள், 310 மினி பவர் பம்புகள், 812 பவர் பம்புகள், 358 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பயன்பாட்டில் இல்லாத நீர் ஆதாரங்களான குளங்கள், கிணறுகள் ஆகியவற்றில் உள்ள நீரினை பரிசோதனை செய்து தரமுள்ளதாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்தப்படும். குழாய் மூலம் குடிநீர் வழங்க இயலாத பகுதிகளில் லாரிகள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும், தேவைக்கேற்ப புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் குடிநீர் வினியோக நேரங்களில் காலை 6 மணி முதல் தினமும் நேரடியாக சென்று களஆய்வு செய்ய வேண்டும். மேலும், கோவை மாவட்டம்- ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) குடிநீர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் 1800 599 6000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் தகவல் மையம் அமைக்கப்படுகிறது.

கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது மிக முக்கிய திட்டமாகும். அப்போது தான் கோவையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகும். திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய பெரிய சரக்கு விமானங்கள் வர முடியும். விமான நிலையம் விரிவாக்கம் செய்யும்போது, விவசாய நிலங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.900, குடியிருப்பு பகுதிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாற்று இடமாக அரசூர் கிராமத்தில் 3 சென்ட் மனையிடம் வழங்கப்படுவதுடன் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் மூலம் வீடுகளும் கட்டித்தரப்படும்.

மேலும், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவான மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.1500 கோடி மதிப்பில் கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி, ரூ.1,682 கோடி மதிப்பில் அத்திக்கடவு- அவினாசி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலேயே அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ள மாவட்டம் கோவை மாவட்டமாகும். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் எந்த விதமான தங்கு தடையின்றி சென்றடைய அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, ஆர்.கனகராஜ், எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.மூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி துரை.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story