தூய்மை இந்தியா திட்டத்தில் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், மலைவாழ் மக்கள் தாசில்தாரிடம் மனு


தூய்மை இந்தியா திட்டத்தில் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும், மலைவாழ் மக்கள் தாசில்தாரிடம் மனு
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 7:02 PM GMT)

பொள்ளாச்சி, வால்பாறை தாலுகாவில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தூய்மைஇந்தியா திட்டத்தில் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என்று தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் ஜெயந்தியிடம், பொள்ளாச்சி, வால்பாறை தாலுகாவை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அரசு அறிக்கையின்படி பசுமை வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். வில்லோனி பிரிவில் இருந்து குடியிருப்புகள் வரை உள்ள சாலையை தார் சாலையாக அமைத்து கொடுக்கவும், குடிநீர் தண்ணீர் தொட்டி கட்டி மோட்டார் வைத்து குடியிருப்பு வரை குடிநீர் குழாய் அமைத்த கொடுக்கவும் வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வீட்டிற்கு ஒரு கழிப்பிடம் கட்டி தர வேண்டும். வில்லோனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்தில் இயங்கி வரும் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே எங்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். மீண்டும் பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு தனியாக ரேஷன் கார்டு வழங்கவும், ரேஷன் கார்டுக்கு நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கும் பொருட்கள் எங்கள் குடியிருப்பு பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யவும், அரசு வழங்கும் உதவி தொகையை குடியிருப்பு பகுதியில் வழங்கவும் வேண்டும். விவசாய துறை மூலம் வழங்கும் மானிய தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story