கூடலூர்- முதுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை


கூடலூர்- முதுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 5 May 2018 10:00 PM GMT (Updated: 5 May 2018 7:14 PM GMT)

கூடலூர்- முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

கூடலூர்,

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் உள்ளது. இதனால் தமிழகத்துக்குள் மாவோயிஸ்டுகள் நுழைந்து விடாமல் இருக்க மாநில எல்லைகளில் நக்சல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை போலீசார் முகாமிட்டு பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர், நடுவட்டம், ஓவேலி, நாடுகாணி, முதுமலை, மசினகுடி, சேரம்பாடி உள்ளிட்ட வனங்களின் கரையோரம் வசிக்கும் ஆதிவாசி மக்களை அடிக்கடி சந்தித்தும் வருகின்றனர்.

அப்போது சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் வனப்பகுதியில் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்களை அதிரடிப்படை போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகை காலங்களில் அதிரடிப்படை போலீசார் ஆதிவாசி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதனால் ஆதிவாசி மக்களுக்கும், அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.

இருப்பினும் வனத்துக்குள் திடீர் என நுழைந்து மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கூடலூர்- முதுமலை புலிகள் காப்பக கரையோர வனமான அள்ளூர்வயல், தொரப்பள்ளி, குனில் உள்பட பல பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேக நபர்களின் நடமாட்டம் இல்லை என அதிரடிப்படை போலீசார் உறுதி செய்தனர். 

Next Story