ஆற்றில் மூழ்கி தாத்தா-பேரன் சாவு


ஆற்றில் மூழ்கி தாத்தா-பேரன் சாவு
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 8:13 PM GMT)

பவானி அருகே ஆற்றில் மூழ்கி தாத்தா மற்றும் பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பவானி

பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் நவயுகம் (வயது 62). இவருடைய மகன் விவேக்சந்திரன். கார் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தர்ஷன் (8) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். தர்ஷன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துமுடித்துவிட்டு 4-ம் வகுப்பு செல்ல இருந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தர்ஷனுக்கு ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதனால் தனது தாத்தா நவயுகத்திடம், தன்னை காவிரி ஆற்றில் குளிக்க அழைத்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளான். உடனே அவர் பேரனை அழைத்துக்கொண்டு பெருமாள்மலை அருகே உள்ள மங்களகிரி காவிரி ஆற்று படித்துறைக்கு சென்றார்.

ஆற்றில் 2 பேரும் இறங்கி கரையோரத்தில் நின்று குளித்து கொண்டிருந்தார்கள். அப்போது தர்ஷன் ஆர்வ மிகுதியால் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டான். அதனால் அவன் தண்ணீரில் மூழ்க தொடங்கினான். இதைப்பார்த்த நவயுகம் உடனே நீந்திச்சென்று தர்ஷனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. அவரும் ஆற்றில் மூழ்கினார். இதில் 2 பேரும் பரிதாபமாக இறந்தார்கள். இந்த நிலையில் வெகுநேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் இரவு 8 மணி அளவில் உறவினர்கள் ஆற்றங்கரைக்கு சென்று பார்த்தார்கள் அங்கு 2 பேரின் காலணிகளும், ஆடைகளும் கிடந்தது. அவர்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினார்கள்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் மீட்டார்கள். இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story