கைத்தறியில் புதுமைகளை புகுத்தும் 72 வயது முதியவர் துணியில் திருக்குறளை நெசவுசெய்து அசத்தல்


கைத்தறியில் புதுமைகளை புகுத்தும் 72 வயது முதியவர் துணியில் திருக்குறளை நெசவுசெய்து அசத்தல்
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

கரூரில் கைத்தறி வேலைப்பாடுகளில் புதுமையை புகுத்தும் 72 வயது முதியவர்,துணியில் திருக்குறளை நெசவுசெய்து அசத்து கிறார்.

கரூர்,

கரூரில் தற்போது நவீன எந்திரங்களை கொண்டு டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் போர்வை, திரைச்சீலை மற்றும் ஜவுளிகள் வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்த கைத்தறி நெசவாளர்களின் நிலை தற்போது இறங்குமுகமாகவே இருக்கிறது.

முன்னொரு காலத்தில் கரூரில் விவசாயம் செழிப்பாக இருந்த போதும், பலர் குடும்பத்துடன் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டனர். காலம் மாறினால் காட்சியும் மாறும் என்பதை போல் தற்போது கைத்தறி நெசவுக்கு ஆட்கள் பற்றாக்குறை, நூல் உள்பட மூலதன பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றால் கைத்தறி நெசவில் போதிய வருமானம் கிடைப்பதில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் பாரம்பரிய கைத்தறி தொழிலை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் கரூர் வெங்கமேட்டில் 72 வயது முதியவர் கே.ஏ.சின்னுசாமி பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார். தற்போது அவர் கைத்தறி மூலம் நெசவு செய்த துணியின் மேல் திருக்குறளை எழுதி வருகிறார். உலக பொதுமறையான திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் எழுதி சாதனை படைப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறார்.

இதற்காக தனியாக அட்டையில் நுணுக்கமாக வரைபடம் (கிராப்) உருவாக்கி, அதில் எழுத்துகளை எழுதி வைத்திருக்கிறார். பிறகு திருக்குறள் புத்தகத்தினை பார்த்து ஒவ்வொரு குறளையும் கைத்தறியில் நெசவு செய்து பொறுமையுடன் எழுதுவது காண்போரை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக சின்னுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் 9-ம் வகுப்பு படித்து முடித்ததும் 14 வயதிலிருந்தே கைத்தறியில் துணி நெசவு செய்யும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டேன். கைத்தறி நெசவு மூலம் திருவள்ளுவர், காந்தி, காமராஜர் உள்ளிட்ட நான் வரைந்த படங்களுக்கு அரசு சார்பில் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

கீற்று கொட்டகையினுள் அமர்ந்து கைத்தறி நெசவில் ஈடுபடுகிற போது, அதன் பெருமைகளை தற்போதைய சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதிய சிந்தனைகளுடன் காண்போரை கவரும் விதமாக போர்வை, கட்டில் விரிப்பு, மேசை விரிப்பு, திரைச்சீலை, ஜோல்னா பை உள்ளிட்டவற்றை பரிசுப்பொருளாக வழங்கும் வகையில் புதுமை படைப்புகளாக நெய்கிறேன்.

கரூருக்கு பெருமை சேர்க்கும் கைத்தறி தொழில் மீது அரசின் கவனம் வர வேண்டும் என்பதற்காகவும், தற்போது நலிவடைந்த நிலையிலுள்ள கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தான் திருக்குறளை எழுதி வருகிறேன். விற்பனைக்காக இதை நான் செய்யவில்லை. 1,330 திருக்குறளையும் எழுதி முடித்ததும் அரசுக்கு அனுப்பி அங்கீகாரம் பெறுவதோடு கைத்தறி தொழிலை மீட்டெடுக்க உதவுமாறு அரசுக்கு வலியுறுத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story