சம்பள உயர்வு கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சம்பள உயர்வு கோரி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2018 9:00 PM GMT (Updated: 10 May 2018 7:28 PM GMT)

கிராமப்புற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி நெல்லையில் தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை, 

கிராமப்புற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி நெல்லையில் தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிராமப்புற தபால் ஊழியர்கள்

கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை சமர்ப்பித்து 18 மாதங்கள் ஆகியும் மத்திய அரசு அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை கண்டித்து தபால் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உறுப்பினர்கள் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும், சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த போராட்ட முடிவுகளை விளக்கி ஆங்காங்கே வாயிற் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தபால் ஊழியர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்ப்பாட்டம்

அதன் ஒரு பகுதியாக நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நெல்லை கோட்ட தபால் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று உணவு இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொறுப்பு செயலாளர் தளவாய் முன்னிலை வகித்தார். மாநில உதவி தலைவர் பாட்ஷா வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தபால் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் செல்வபாரதி, முனியப்பன், சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story