மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி 2 பேர் காயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி 2 பேர் காயம்
x
தினத்தந்தி 10 May 2018 8:18 PM GMT (Updated: 10 May 2018 8:18 PM GMT)

சென்னை தேனாம்பேட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியனார்.

சென்னை, 

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 21). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா (24) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தேனாம்பேட்டை நோக்கி சென்றார்.

தேனாம்பேட்டை கதீட்ரல் சாலை - கஸ்தூரி ரங்கன் சாலை சந்திப்பு அருகே சென்றபோது எதிரே ஆழ்வார்பேட்டையை சேர்ந்த வெங்கட்ராமன் (18) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ஹரிஹரன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹரிஹரன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story