நெய்வேலியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


நெய்வேலியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 9:03 PM GMT)

நெய்வேலியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

மந்தாரக்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீஸ் படையினர் கடந்த மாதம் 11-ந்தேதி மந்தாரக்குப்பம் மெயின்ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது வடக்கு வெள்ளூர் அய்யப்பன் கோவில் தெருவைச்சேர்ந்த மணிகண்ணன் என்பவரது மகன் அஜித் கண்ணன்(வயது23) மற்றும் உக்கரவேல்(47) ஆகியோர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து பிடிக்க முயன்ற போது, இருவரும் போலீசாரை அசிங்கமாக திட்டி கத்தியால் வெட்ட முயன்றார்களாம். எனினும் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

விசாரணையில், அவர்கள் இருவரும், தாண்டவன் குப்பத்தைச்சோந்த ரவுடி வெட்டு சசி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. ரவுடி வெட்டு சசியை கொலை செய்ததாக இருவரும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில் ரவுடியான அஜித்கண்ணன் மீது ஏற்கனவே மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது.

இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால், இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரைப்படி கலெக்டர் தண்டபாணி உத்தரவின்பேரில் அஜித்கண்ணனை மந்தாரக்குப்பம் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறையில் இருக்கும் அவரிடம் வழங்கப்பட்டது. 

Next Story